இந்நாள் , முன்னாள் ஜனாதிபதிகளை மீண்டும் இணைய வைப்பதில் வெளிநாட்டு சக்தி ஒன்று முயற்சி

 மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியை மீண்டும் இணைய வைப்பதில் வெளிநாட்டு சக்தி ஒன்று, அழுத்தங்களைக் கொடுத்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், மைத்திரிபால சிறிசேனவையும், மகிந்த ராஜபக்சவையும் சந்தித்துப் பேச வைப்பதற்கான உயர்மட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக இரண்டு தரப்புகளுக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

கட்சியின் மூத்த உறுப்பினர்கள், மைத்திரிபால சிறிசேனவுடன், மகிந்த ராஜபக்சவைச் சந்திக்க வைப்பதற்கான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஒற்றுமைப்படுத்தும் பேச்சுக்களில் மகிந்த ராஜபக்சவை இணைந்து கொள்ளுமாறு, வெளிநாட்டு சக்தி ஒன்றும் அவரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.