சுய தொழில் முயற்சியாளர்களுக்கான நடமாடும் சேவை முல்லைத்தீவில் இன்று…

ஊடகப்பிரிவு

இன,மத அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மனித நேயத்தையும் மக்கள் நலனையும் இலக்காகக்கொண்டு சுய தொழில் முயற்சியாளர்களுக்கான நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மக்களின் காலடிக்கு வந்து, தமது அமைச்சின் கீழான நிறுவனங்கள் மேற்கொள்ளும் இந்த திட்டத்தின்; உச்ச பயனைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள்விடுத்தார். 

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்திச் சபை, நெடா, புடவைக்கைத்தொழில் நிறுவனம,; தேசிய வடிவமைப்பு நிறுவனம் மற்றும் இன்னோரன்ன நிறுவனங்கள் கூட்டாக இணைந்து வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று (2017.05.28) ஏற்பாடு செய்திருந்த சுய தொழில் முயற்சியாளர்களுக்கு உதவும் நடமாடும் சேவையில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார். 

அமைச்சர் மேலும் கூறியதாவது,

வன்னி மாவட்டம் யுத்தப் பாதிப்புக்களால் மிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்ட ஒன்று. இங்குள்ள மக்கள் சொந்தக்கால,; சுதந்திரமாக, சுயதொழில் செய்து வாழவேண்டும் என்ற நோக்கிலேயே இந்த சேவை நடாத்தப்படுகின்றது. சுயதொழில் முயற்சியாளர்கள் தமக்கு ஏற்ற, தாம் விரும்பிய தொழிலை மேற்கொள்வதற்கு எனது அமைச்சு உதவும். அமைச்சின் கீழான நிறுவனங்கள், தொழில் முயற்சியாளர்களுக்கு பொருத்தமான உதவிகளை நல்கத்திட்டமிட்டுள்ளது. எனவேதான் அனைத்துத் திணைக்களங்களையும் ஒரு முகப்படுத்தி, ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து  இந்த இடம்பெயர் சேவையை நடாத்துகின்றோம். இதன் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் குடும்பச்சுமையைக் குறைக்கவும் முடியுமென நம்புகின்றோம்.

அரச அதிபர், பிரதேச செயலாளர்களுடன் இணைந்து முதன் முதலாக வன்னி மாவட்டத்திலே இந்தச் சேவையை ஆரம்பித்து வரலாறு ஒன்றை தடம்பதித்துள்ளோம்.

உங்களிடம் வழங்கப்பட்டுள்ள கோவையிலிருக்கும் விவரங்களை வாசித்து, உங்களுக்கு ஏற்புடைய ஏதாவது ஒரு தொழிலை அடையாளப்படுத்தி அதிகாரிகளிடம் கொடுத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம். பயிற்சிகளோ, குறித்த தொழிலுக்கு தேவையான உபகரணங்களோ அல்லது கடன் உதவியோ வழங்கப்படும். அதுமட்டுமன்றி உற்பத்திப்பொருட்களை சந்தைப்படுத்தவதற்குக் கூட வசதிகள் செய்து தரப்படும்.

இந்த மாவட்டத்திலே தென்னை, பனை வளம் உட்பட நிரம்ப வளங்கள் தாராளமாக உண்டு அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் உங்கள் மனதில் பட்டதை கூறினால் அதற்கும் உதவக் காத்திருக்கின்றோம்.

தனிநபர்கள் மாத்திரமின்றி கூட்டாகவும் சுயதொழிலை மேற்கொள்ள முடியும் கூட்டு முயற்சியின் மூலம் கூட்டுறவின் அடிப்படையில் அதனை உருவாக்கி பங்குதாரர்களாக மாறுங்கள.; அது நீண்ட காலம் நிலைக்கக்கூடிய முயற்சியாகும். 

இங்குள்ள பலருக்கு ஆற்றலும் திறமையும் இருந்தும் ஆதரவு கொடுக்க யாருமில்லாத நிலையிலேதான் நாங்கள் கை கொடுக்க முன்வந்துள்ளோம். 

இந்த நடமாடும் சேவையில் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்குவதற்காக திணைக்களங்களின் தலைவர்களும் உயர் அதிகாரிகளும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இங்கு வந்துள்ளனர். எனவே உரிய முறையில் நடமாடும் சேவையை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன், ஜனூபர், ஜயதிலக்க, அமைச்சின் மேலதிக செயலாளர் தாஜூடீன்  அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி மொகைடீன் உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.