சதொச நிறுவனம் தனியார் மயப்படுத்தப்படுமென கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும்: அமைச்சர் ரிஷாட்

ஊடகப்பிரிவு

லங்கா சதொச நிறுவனம் ஒரு போதும் தனியார்மயப்படுத்தப்படமாட்டாது என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உறுதிபடத் தெரிவித்தார். 

லங்கா சதொச மற்றும் ஹேமாஸ் நிறுவனம் இணைந்து நடாத்திய வாடிக்கையாளர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றோhர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கொழும்பு சினமன் கிரேன்ட் ஹேட்டலில் நடைபெற்ற போது அமைச்சர் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,; 

சதொச நிறுவனம் தனியார் மயப்படுத்தப்படுமென சமூக வலைத்தளங்களில் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும். இந்தச் சந்தர்ப்பத்தில் உண்மையை வெளிப்படுத்துவது எனது கடமையாகும். 

லங்கா சதொச நிறுவனம் அரசாங்கத்தின் பிரமாண்டமான சில்லறை வர்த்தக வலையமைப்பாகும். நாட்டின் தரமான ஏனைய தனியார் சுப்பர்மார்க்கட்டுகளுடன் போட்டிபோடக்கூடிய ஒரு நிறுவனமாக இதனை மாற்றியமைக்கும் நோக்கிலேயே நாம் எமது வேலைத்திட்டங்களை முன்னோக்கி நகர்த்துகின்றோம். 

ஒரு காலத்திலே இந்த நிறுவனம் முகாமைத்துவத்தினதும், உயர் அதிகாரிகளினதும் தேவைகளை நிறைவேற்றும் வகையிலான பொறிமுறையை மட்டுமே கொண்டிருந்தது. ஆனால் இன்று அந்த நிறுவனத்தை ஏனைய நிறுவனங்களுடன் போட்டிபோடக்கூடிய வகையில் உருவாக்கி வருகின்றோம். 

நான் சதொசவை பொறுப்பேற்றதன் பின்னர் பல்வேறு விடயங்கள் சீர்செய்யப்படுள்ளன. 300ஆக இருந்த சதொச கிளைகளின் எண்ணிக்கையை 377ஆக உயர்த்தியுள்ளோம். இந்த வருட டிசம்பர் முடிவடைவதற்குள் கிளைகளின் எண்ணிக்கையை 500ஆக அதிகரிப்போம். கடந்த காலங்களில் லங்கா சதொச நிறுவனத்திடமிருந்த பிரத்தியேக ஆட்சேர்ப்பு நடைமுறையை இல்லாமலாக்கி அதனை ஆலோசனை நிறுவனமான கே.பி.எம்.ஜீயிடம்  கையளித்துள்ளோம். கே.பி.எம்.ஜீயின் ஆட்சேர்ப்பு நடைமுறைகளில் நாம் எந்தச் செல்வாக்கையும் செலுத்துவதில்லை. நுகர்வோரை திருப்திப்படுத்துவதே எமது தலையாய இலக்கு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் நியாயமான விலைக்கு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் லங்கா சதொச கிளைகள் மூலம் விநியோகிப்பதே எமது நோக்கமாகும். 

லங்கா சதொசவின் பொருட்கள் விநியோக ஒழுங்கு நடைமுறையை அண்மையில் ஹேமாஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்தோம். லங்கா சதொச விநியோக நடைமுறையில் தடங்கல்களும், இடர்பாடுகளும் இருப்பதனை கே.பி.எம்.ஜீ நிறுவனம் தமது ஆய்வில் கண்டறிந்தது. அந்த நிறுவனத்தின் சிபாரிசுக்கமையவே விநியோகம் தொடர்பில் திறந்த கேள்விப் பத்திரங்களை கோரியிருந்தோம். எமது விதிகளுக்கு கட்டுப்பட்டு ஹேமாஸ் நிறுவனம் தனது விண்ணப்பத்தை பூர்த்தி செய்ததனாலேயே அந்த நிறுவனம் தெரிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர் அமைச்சாவையின் அனுமதியுடன் ஹேமாஸ் நிறுவனத்திற்கு இந்த விநியோக பொறிமுறையை நாம் வழங்கினோம். நான் இந்த முடிவை தன்னிச்சையாக எடுக்கவில்லை. எனினும் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களுடாக ‘லங்கா சதொசவை ஹேமாஸிற்கு ரிஷாட் விற்றுவிட்டார்’ என்று வதந்திகள் பரப்பப்பட்டன. இது அப்பட்டமான பொய்யான குற்றச்சாட்டு. 

லங்கா சதொச 500கிளைகளாக அதிகரிக்கப்படும் அதே வேளை, எண்ணாயிரம் உரிமை வியாபார நிறுவனங்களையும் (குசயnஉhளைந ழரவடநவள) எதிர்காலத்தில் உருவாக்கவுள்ளோம். இந்த நிறுவனங்களிலும் லங்கா சதொச நிறுவனத்திலும் அதே விலையில் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் விற்பனை செய்வோம். 

தனியார் நிலையங்களுக்கு விநியோக நடைமுறைகளை கொடுத்ததன் மூலம் லங்கா சதொசவின் சுமைகள் பாரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.