இஸ்ரேலின் அராஜகத்திற்கு எதிராக எழுந்திட முடியாத கோழைகளாக இருப்பதையிட்டு நாம் வெட்கப்பட வேண்டும் :முஜீபுர் றஹ்மான்

பலஸ்தீன சிறைக்கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் 18வது நாளாக தொடர்கிறது. அரசியல் தலைவர்களின் ஆதரவோடு முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த போராட்டம் கூர்மையடைந்தும் வருகிறது. 

தனது சொந்த பூமியில் அடிமைகளாகவும்,   அகதிகளாகவும்  கைதிகளாகவும் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் பலஸ்தீன் மக்கள் உள்ளார்கள். 
மத்திய கிழக்கில்   நான்கு பக்கமும் முஸ்லிம்களால் சூழப்பட்ட நாடுகளைக் கொண்டிருந்தும்  சின்னஞ் சிறிய    இஸ்ரேலின் அராஜகத்திலிருந்த இந்த மக்களைக் காப்பாற்ற திராணியற்ற சமூகமாக முஸ்லிம் சமூகம்   இருப்பதையிட்டு நாம் வெட்கமும் வேதனையும் பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
பலஸ்தீன சிறைக்கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து  கொழும்பு பலஸ்தீன் தூதுவராலயத்தில்   கையெழுத்து இடும் நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
இஸ்ரேலிய சிறைகளிலுள்ள 1500 கைதிகள் கடந்த ஏப்ரல் மாதம் 17ம் திகதி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். மே மாதம் 3ம் திகதிபலஸ்தீனின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் இந்த உண்ணாவிரதத்தில் இணைந்துள்ளனர். இஸ்ரேலின் அராஜகத்தை உலகுக்கு எடுத்துக்காட்டி இந்த அநீதிக்கு தீர்வு காணும் முயற்சியில் இறங்க முஸ்லிம் நாடுகள் முன்வர வேண்டும்.
1948 முதல் ஒரு மில்லியன் பலஸ்தீனர்கள்  இஸ்ரேலிய இராணுவத்தால்  கைது செய்யப்பட்டிருப்பதாக தரவுகள் கூறுகின்றன.இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை துச்சமாக மதித்தே இந்த அராஜகங்களை நடாத்தி வருகிறது.சிறுவர்கள், பெண்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் வாடி வருகின்றனர். 
ஐ. நா . சபை கூட இந்த அநீதிகளைக் கண்டும் காணாது போல் செயற்பட்டு வருகிறது. முஸ்லிம் உலகின் ஒற்றுமையே இந்த அநீதிகளை அழிக்கக் கூடிய ஆயுதமாகும். பலஸ்தீன் மக்களின் துன்பங்களிலும் துயரங்களிலும் பங்கு கொண்டு அவர்களின் உண்மையான விடிவுக்கு உழைப்பது மனித நேயத்தை விரும்பும் அனைவரினதும் கடமையாகும் என்றும் முஜீபுர் றஹ்மான் கூறினார்.