கபீர் கஷீமுக்கு வழங்கப்பட்டுள்ள செயலாளர் பதவி மிக விரைவில் பறிபோகவுள்ளது: பசில் ராஜபக்ஸ

                 கபீர் ஹசீமின் செயலாளர் பதவி வெறும் கண் துடைப்பு

கபீர் ஹசீமுக்கு வழங்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பதவியானது வெறும் கண் துடைப்பென முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.நேற்று பானந்துறையில் இடம்பெற்ற முஸ்லிம்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது

தற்போது முஸ்லிம்களின் பெரும் பங்களிப்புடன் ஆட்சிபீடமேறியுள்ள ஐக்கிய தேசிய கட்சியானது எப்போதும் முஸ்லிம்களின் நலன்களுக்காக செயற்பட்டதில்லை.இப்போது முஸ்லிம்களின் நிலை எமது ஆட்சிக் காலத்தை விடவும்  மோசமாகவுள்ளமை இதற்கான துல்லியமான சான்றாகும்.

ஐக்கிய தேசிய கட்சியானது கபீர் ஹசீமை செயலாளராக நியமித்து முஸ்லிம்களை கெளரவப்படுத்தியுள்ளதாக  முஸ்லிம்களில் ஒரு சாரார் கூறுவதை அவதானிக்க முடிகிறது.இன்றும் சரி,அன்றும் சரி, எப்போதும் கபீர் ஹசீம் முஸ்லிம்களின் நலனை கருத்தில் கொண்டு பேசியதை நான் அவதானித்ததில்லை.அவருக்கு செயலாளர் பதவி வழங்கப்பட்டாலும் அதன் பூரண அதிகாரங்களை இவர் கையில் எடுத்து செயற்படுமளவு  அதிகாரம் இவருக்கு இன்னும் வழங்கப்படவில்லை  போன்றே இவரது செயற்பாடுகள் அமைந்துள்ளன.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் செயலாளர்களின் வகிபாகம் முக்கியமானதாக இருந்தது.ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் எங்கள் பக்கம் வந்தார்.எங்களுடைய செயலாளர் அவர்கள் பக்கம் இருந்தார்.இவ் இடத்தில் இரு கட்சிகளுக்குமிடையிலான மோதல் சம நிலையில் இருந்தது.இவ் விடத்தில் மீள நியமிக்கப்படும் செயலாளர் எங்கும் செல்லாதுள்ளவராக இருப்பதை இரு கட்சிகளும் உறுதி செய்து கொள்வது தங்களின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.

அச் சந்தர்ப்பத்தில் நாங்கள் தயக்கமின்றி எங்கள் கட்சியின் செயலாளரை நியமித்தோம்.முஸ்லிம்கள் எம் மீது கோபம் கொண்டவர்களாக இருந்ததால்  ஐக்கிய தேசியக் கட்சியானது அவ் விடத்திற்கு கபீர் ஹசீமை நியமிப்பது மிகவும் பொருத்தமானதாக கருதியது.இப்படித் தான் அவர் நியமிக்கப்பட்டார்.அந் நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியானது முஸ்லிம்களின் வாக்குகளையே தங்களின் வெற்றிக்கு பிரதானமாக கருதியது.கபீர் காசிமை செயலாளராக நியமிப்பது முஸ்லிம்களை ஐ.தே.க கவரவும் வழி கோலும் என்ற விடயமும் அதன் பின்னால் ஒழிந்திருந்தது.

இவ்வாறு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முற்று முழுதாக முஸ்லிம்களின் வாக்குகளை மையப்படுத்தி வாக்கு வியூகங்களை வகுத்து முஸ்லிம்களை எம்மிடமிருந்து பலவாறான குறுக்கு வழிகளை கையாண்டு பிரித்த இவ்வாட்சியானது,இன்று முஸ்லிம்களின் எந்தவிதமான அபிலாசைகளையும் நிறைவேற்றவில்லை.இன்று கபீர் கஷீமுக்கு வழங்கப்பட்டுள்ள செயலாளர் பதவி கூட மிக விரைவில் பறிபோகவுள்ளது.இவ்வாட்சியானது முஸ்லிம்களை இயலுமானவரை பாவித்துவிட்டு இன்று கை கழுவியுள்ளது என்பதே உண்மையாகும்.