வில்பத்து மக்களின் பிரச்சனையை விட கல்முனை அபிவிருத்தி நிகழ்வு மு.காவினருக்கு முக்கியமா ?

 கடந்த வெள்ளிக்கிழமை கல்முனையில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் முன் வைத்த குற்றச் சாட்டை எடுத்து நோக்கினால் அமைச்சர் ஹக்கீம் இந்த விடயத்தில் எந்தளவு பொடு போக்காக செயற்படுகிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அக் கூட்டத்தில் ஹுனைஸ் பாறூக் கூறியது, 

///// “நேற்று எங்களுக்கு ஜம்மியத்துல் உலமா சபையிடம் இருந்து அழைப்பு வந்தது.மன்னார் வில்பத்து தொடர்பான அவசர கூட்டமுள்ளது வருமாறு கூறி.மு.கா சார்பாக நானும் கௌரவ பிரதி அமைச்சர் பைசால் காசிமும் அதற்கு சென்றிருந்தோம்.அந்த கூட்டத்தில் வன்னி அமைச்சர்,அசாத் சாலி,பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான்,அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் உட்பட உலமா சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.இன்று ஒன்னரை மணிக்கு ஜனாதியின் செயலாளரையும்,வனம் தொடர்பான உறுப்பினர்களையும்,ஜனாதிபதியையும் சந்திப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டது.இதில் கலந்து கொண்ட உலமா சபை உறுப்பினர்களும் மு.கா சார்பாக நானும் பிரதி அமைச்சர் பைசால் காசிமும்,வன்னி அமைச்சர் சார்பாக வந்தவர்களும் கலந்து கொள்வதாக முடிவெடுக்கப்பட்டது.அந்த கூட்டத்தில் அவர் வலிந்து சொன்ன விடயம் எப்படியாவது மு.காவின் கூட்டத்திற்கு வர வேண்டும்.இதன் போது நாங்கள் சொன்னோம்,கல்முனையில் இன்று பல அபிவிருத்தி கூட்டங்களை திறந்து வைக்கின்றார்.அவர் சார்பாக நாங்கள் வருகிறோம்.அமைச்சர் றிஷாதை விட அந்த பிரதேசத்தின் பிரச்சினை எங்களுக்கு முக்கியமானது.அதன் போது அமைச்சர் றிஷாத் இல்லை.. இல்லை..வன்னி மக்கள் மு.காவுக்கு வாக்களித்துள்ளார்கள் அவர் வர வேண்டும்.இதன் போது எனக்கு பக்கத்தில் இருந்தவரிடம் சொன்னேன் நாளை கல்முனையில் இடம்பெறவுள்ள அபிவிருத்தியை குலைக்க வேண்டும்.நாளை ஜும்மாவின் பிறகு எனது துவா பிராத்தனையை தடுக்க வேண்டும்” ///

வில்பத்து பிரச்சினை இலங்கையின் தேசிய பிரச்சினைகளில் ஒன்று.அது வர்த்தமானிப் படுத்த ஜனாதியின் கையொப்பமும் பெறப்பட்டுவிட்டது.இந் நேரத்தில் அனலில் பட்ட புழு போல் துடித்துக் கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும்.எந்தளவு எமது பலம் பிரயோக்கிக்கப்பட வேண்டுமோ அத்தனை அழுத்தங்களையும் இந் நேரத்தில் பிரயோக்கிக்க வேண்டும்.இதற்கு மு.காவை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் ஹக்கீம்,தான் சென்றிருக்க வேண்டும்.அவருடன் வடக்கை சேர்ந்த சிலரும் செல்வதே பொருத்தம்.இக் கூட்டத்திற்கு தனது பிரதிநிதிகளை அனுப்பி சாதிக்குமளவு இது சிறிய விடயமல்ல.இக் கூட்டத்திற்கு மு.கா சார்பாக ஹுனைஸ் பாறூக்கும்,பிரதி அமைச்சர் பைசால் காசிமும் சென்றார்களாம்.பிரதி அமைச்சர் பைசால் காசிம் பேச்சு திறமையற்றவர் என்பது யாவருக்கும் தெரியும்.இவ்வாறான கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளும் போது அதில் திறம்பட செயற்பட மாட்டார் இவைகளை நன்கு கூர்ந்து அவதானித்தால் மு.கவினர் எந்தளவு பொடு போக்காக செயற்படுகிறார் என்பதையும் எடுத்து காட்டுகிறது.

இக் கூட்டமானது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.இன்று இலங்கை முஸ்லிம்களின் அதிக ஆதரவை கொண்ட இவ்வமைப்பு அழைக்கும் போது இதற்கு மு.காவினர் மதிப்பளிப்பதானால் அமைச்சர் ஹக்கீம் கலந்து கொண்டிருக்க வேண்டும்.இதில் அவர் கலந்து கொள்ளாமையானது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவையும் புறக்கணிக்கும் செயலாகும்.

குறித்த கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் உட்பட வனம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதில் தற்போது அரசியல் ரீதியாக எந்த பதவிகளும் அற்ற ஹுனைஸ் பாறூக் ஜனாதிபதியிடமும் ஏனையவர்களிடமும் குறித்த விடயங்களை எடுத்துரைக்கும் போது முன் வைக்கும் முறைமைக்கும் மு.காவின் தலைவரும் பலமிக்க அமைச்சு பதவியை சுமந்துள்ளவருமான ஹக்கீம் முன் வைக்கும் முறைமைக்கும் இடையே மலைக்கும் மடுவிற்கும் இடையில் உள்ள வேறு பாடு காணப்படும்.ஒரு விடயத்தை முன் வைக்கும் நபர்களும் அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் இந்த கூட்டத்தில் வில்பத்து மக்கள் மீது அமைச்சர் ஹக்கீம் உண்மையான அக்கறை கொண்டிருந்தால் கலந்து கொண்டிருப்பார்.கவனத்தை திருப்ப அவசியமானவர்கள்.

இக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாத்,அமைச்சர் ஹக்கீம் கலந்து கொள்ள வேண்டுமென வலிந்து கூறியுள்ளார்.இதன் போது ஹுனைஸ் பாறூக் முன் வைத்த பிரதான குற்றச்சாட்டு,தானே எல்லாம் செய்ய வேண்டும் என அமைச்சர் றிஷாத் நினைக்கின்றார் என்பதாகும்.அப்படியானால் இக் கூட்டத்திற்கு அமைச்சர் றிஷாத் ஏன் அமைச்சர் ஹக்கீமை அழைக்க வேண்டும்.இக் கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீம் கலந்து கொள்ளும் போது இதில் கிடைக்கக் கூடிய அரசியல் ஆதாயங்களில் அமைச்சர் ஹக்கீமும் பங்கு கொள்வார்.அமைச்சர் றிஷாத் சுயநல வாதியாக இருந்தால் இவரை அழைக்காமல் இருந்திருப்பார் என்பதே உண்மை.அமைச்சர் றிஷாத்,அமைச்சர் ஹக்கீமை அழைத்தமையானது அவரின் நிலையில் இருந்து கீழ் இறக்கிய செயற்பாடாகவும் நோக்கலாம்.

அமைச்சர் ஹக்கீம் கலந்து கொள்ளாமைக்கு ஹுனைஸ் பாறூக் முன் வைத்த காரணம் கல்முனையில் அபிவிருத்தி நிகழ்வு இருப்பதாகும்.குறித்த கல்முனை நிகழ்வை அமைச்சர் ஹக்கீம் சென்றுதான் நடத்த வேண்டும் என்ற நிலை இல்லை.அவர் கலந்து கொள்ளத் தான் வேண்டும் என்றால் பிறிதொரு நாளுக்கும் மாற்றி இருக்கலாம்.அதாவது இங்கு இன்னுமொரு விடயத்தையும் விளங்கிக் கொள்ளலாம்.வில்பத்து மக்களின் இருப்பிடப் பிரச்சனையை விட கல்முனை அபிவிருத்தி நிகழ்வு மு.காவினருக்கு முக்கியமானது என்பதாகும்.எது முக்கியமானது என்பதை வாசிப்பவர்கள் தீர்மானித்து கொள்ளுங்கள்.இந் நிகழ்வை குறித்த தினம் ஏற்பாடு செய்து ஹுனைஸ் பாறூக் கலந்து கொள்ளவிருந்த துவா பிராத்தனையை தடுப்பதும் அமைச்சர் றிஷாதின் திட்டமாகும் என கூறுகிறார்.குறித்த நிகழ்வானது அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவினால் நடாத்தப்பட்டது.இதில் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.இவர்கள் அனைவரும் சேர்ந்தே சந்திக்கும் நாள் உட்பட அனைத்தையும் தீர்மானித்தார்கள்.அப்படி இருக்கும் போது இவ்விடாயத்தில் இவர் அமைச்சர் றிஷாதை குற்றம் சாட்டுவது வேண்டாத பொண்டாட்டியின் கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் போன்ற கதையாகவுள்ளது.

கல்முனை கூட்டத்தில் ஹுனைஸ் பாறூக் முன் வைத்த குற்றச் சாட்டுக்களானது அமைச்சர் ஹக்கீமின் வில்பத்து பொடு போக்கை தெளிவாக எடுத்துரைக்கின்றது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.