பாதிக்கப்பட்டிருக்கும் சிரியா குழந்தைகள்தான் உண்மையான ஹீரோக்கள்: ரொனால்டோ கருத்து

போர்த்துக்கல்  நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்து வருகிறார். ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வரும் இவர், இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். கிறிஸ்டியானோ ரொனால்டோவை, சிரியாவில் நடைபெற்று வரும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நிலைமை கடுமையாக பாதித்துள்ளது.

இதனால் அங்கு பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உணவு, மருந்துகள் மற்றும் உளவியல் சார்ந்த உதவிகளை வழங்குவதற்கான பிரச்சாரத்தில் அவர் இணைந்துள்ளார்.

அங்குள்ள குழந்தைகள் பாதிக்கப்படுவது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் ‘‘ஹலோ, இது சிரியாவில் உள்ள குழந்தைகளுக்காக… நீங்கள் எவ்வளவு சிரமத்திற்கு ஆளாகிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நான் மிகவும் பிரபலம் வாய்ந்த வீரராக இருக்கலாம், ஆனால், நீங்கள்தான் உண்மையான ஹீரோக்கள்.

உங்களுடைய நம்பிக்கையை இழக்க வேண்டாம். உலகம் உங்களோடு இருக்கிறது. உங்களைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம். நான் உங்களோடு இருக்கிறேன்’’ என்று பதிவு செய்துள்ளார்.