தான் தப்பித்து கொள்ள பிரதியமைச்சர் ஹரீஸை காவு கொடுத்த அமைச்சர் ரவூப் ஹக்கீம்

இப்றாஹிம் மன்சூர்

 

 இத்தனை காலமும் அமைச்சர் ஹக்கீம் மிகவும் பொடு போக்காக தனது செயற்பாடுகளை அமைத்து வந்தார்.இதற்கு இலங்கை முஸ்லிம்களிடையே மு.காவை எதிர்த்து அரசியல் செய்ய முடியாத நிலை காணப்பட்டமை பிரதான காரணமாகும்.தற்போது இலங்கை முஸ்லிம்களது கேள்விக் கணைகள் அமைச்சர் ஹக்கீமை நோக்கி நாளாந்தம் பல வடிவங்களில் வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அதிர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஹக்கீமிடம் கேட்கப்பட்ட இரு வினாக்களிற்கான விடைகளின் போது தான் தப்பித்து கொள்ள பிரதி அமைச்சர் ஹரீஸ்,முன்னாள் தவிசாளர் வாஸித் ஆகியோரை காவு கொடுத்து தப்பித்திருந்தார்.

அமைச்சர் ஹக்கீம் பிரதி அமைச்சர் ஹரீஸை கல்முனை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியாக விடயத்தில் பலி கொடுத்திருந்தார். இவருக்கு பிரதி அமைச்சும் வழங்கியுள்ளோம்.இவர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான ஒரு தகுந்த இடம் தேடி தருகின்றாரில்லை என்ற குற்றச் சாட்டை முன் வைத்திருந்தார்.

கல்முனை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தை கல்முனைக்கு கொண்டு வருவதில் பிரதி அமைச்சர் ஹரீஸ் மிகவும் கரிசனை காட்டி வருகிறார்.அண்மையில் பாராளுமன்றத்திலும் இது தொடர்பான இவரது குரல் ஓங்கி ஒலித்திருந்தது.இது விடயத்தில் இவரை அமைச்சர் ஹக்கீம் குற்றம் சாட்டுவதில் நியாயமிருப்பதாக கூறமுடியாது.

கல்முனை என்பது ஒரு அழகிய நகரம்.அந்த நகரத்தில் நூறு பேர் தங்கி பயிற்சி பெறும் ஒரு இடத்தை பிரதான வீதியில் பெறுவது கடினமான விடயம்.அதிலும் ஒரு  குறித்த வாடகையில் பெறுவது இன்னும் கடினமான விடயம்.இருந்தாலும் இதற்கு தீர்வில்லாமலில்லை.கல்முனையின் உட் பிரதேசங்களில் இதனை அமைத்து மக்கள் பயண போக்கு வரத்து செய்யக்கூடியவாறு பேரூந்துகளை ஏற்பாடு செய்யும் போது இதன் போது ஏற்படக் கூடிய இடர்பாடுகளை தவிர்ந்து கொள்ளலாம்.இப்படியான திட்ட நடைமுறைகள் தான் ஒரு  நகரத்தின் அபிவிருத்திக்கும் காரணமாகும்.கல்முனை நாளாந்தம் நூற்றுக்கணக்கான பேரூந்துகள் வந்து செல்லும் இடம் என்பதால் இத் திட்டத்தை நடை முறை படுத்தக் கூடிய சாதகமான நிலையுமுள்ளது.

குறித்த வசதிகளை அவர்கள் கோருவதன் பின்னணியில் இவர்களால் இப்படியான ஒரு இடத்தை கண்டு பிடிக்க முடியாது என்ற தந்திரோபாயமும் இருக்கலாம்இதனை ஹக்கீமும் தூக்கி பிடித்து வந்து குறிப்பிடுகிறார்.அண்மையில் கல்முனையில் அமையப்பெற்றுள்ள தொழில் பயிற்சி அதிகார சபை இடமாற்றப்படும் முயற்சிகள் இடம்பெற்றிருந்தன.இதனை அமைச்சர் ஹக்கீமை தவிர ஏனைய அரசியல் வாதிகள் பலரும் முன்னின்று தடுத்திருந்தனர்.இதனை வைத்து பார்க்கும் போது பிரதி அமைச்சர் ஹரீஸ் அமைச்சர் ஹக்கீமை நம்பி இவ்விடயத்தில் ஏமாந்து போனார் என்றே சிந்திக்க தோன்றுகிறது.

அவர்கள் கூறுகின்ற பிரகாரம் கல்முனையில் ஒரு தகுந்த  இடமின்மை தான் பிரச்சினை என்றால் அதனை கண்டு பிடிக்காமல் பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றத்தில் வீர வசனம் பேசியதேன் என்ற கேள்வி எழலாம்.இந்த வினாவிற்கான விடையில் இரு பார்வைகள் உள்ளன.ஒன்று அமைச்சர் ஹக்கீம் மக்களை ஏமாற்ற வேண்டும் அல்லது  பிரதி அமைச்சர் ஹக்கீம் மக்களை ஏமாற்ற வேண்டும்.இந்த வினாவிற்கான விடையை பெருவதொன்றும் கடினமானதல்ல.பிரதி அமைச்சர் ஹரீஸ் இதனை பாராளுமன்றத்தில் வைத்து கூறும் போது இதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கொறல்ல பதில் அளிக்க நிர்பந்திக்கப்படுவார்.அதன் போது முதலில் நீங்கள் நாங்கள் கூறிய பிரகாரம் ஒரு இடத்தை தாருங்கள் என்றால் பிரதி அமைச்சர் ஹரீஸ் வாய் அடைத்து போய் விடுவார்.ஆனால்,அன்றோ அதன் பிறகோ இப்படியான எந்த சம்பவமும் இடம்பெறாமையும் பிரதி அமைச்சர் ஹரீஸ் இது தொடர்பில் தைரியமாக பாராளுமன்றத்தில் வைத்து வினா எழுப்பியதையும் வைத்து பார்க்கும் போது  பிரதி அமைச்சர் ஹரீசின் செயற்பாடுகளில் எந்த வித பிழையுமில்லை என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது.

அண்மைக் காலமாக பிரதி அமைச்சர் ஹரீசின் செயற்பாடு மிகவும் சிறப்பாக உள்ளதாக பலராலும் பாராட்டப்படுகிறது.சிலர்  இவர் தான் மு.காவின் தலைமைத்துவத்துவத்திற்கு தகுதியானவராகவும் குறிப்பிட்டு வருகின்றனர்.தற்போது இவர் அமைச்சர் ஹக்கீமை பற்றி சிந்திக்காது தனது செயற்பாடுகளை அமைத்தும் வருகிறார்.இதன் காரணமாக இவரை மட்டம் தட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் அமைச்சர் ஹக்கீம் இதனை பயன்படுத்தியிருக்கலாம்.பெரும் பாலும் அமைச்சர் ஹக்கீம் தனது இயலாமையை மறைக்க இவரை அவ்விடத்தில் பலி கொடுத்ததாகவே நம்பப்படுகிறது.