கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கான ஊதியம் அதிகரிப்பு: நூல் வெளியீட்டுவிழாவில் அமைச்சர் ரிஷாட்

 

அமைச்சின் ஊடகப்பிரிவு

அமைதியாக தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுவரும் கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு அவர்களின் சேவைக்குரிய பிரதிபலனாக சம்பள அதிகரிப்பு தொடர்பான “சம்பள மீளாய்வு வழிகாட்டி நூல்” வெளிவருவது இவர்களுக்குக் கிடைக்கின்ற வரப்பிரசாதமாகும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 

இலங்கைமன்றக் கல்லூரியில் இன்று காலை (20) இடம் பெற்ற “கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கான வழிகாட்டி நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் செயலாளர் டி. எம். கே. தென்னக்கோன்,  கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், கூட்டுறவு பணியாளர் ஆணைக்குழுவின் தலைவர் திருமதி சந்திரபாலி உடுகம்பல உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

 

அமைச்சர் இந்த நிகழ்வில் உரையாற்றி போது கூறியதாவது, 

இந்த நாட்டின் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் எமது அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பை நல்கிவருகின்றனர். அவர்களின் பங்களிப்பையும் சேவையையும் அடையாளம்கண்டு அங்கீகரிக்க வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுகின்றது என்ற நல்ல செய்தியை இந்த சந்தர்ப்பதில் தெரிவித்துக் கொள்கின்றேன். சம்பள மீளாய்வு வழிகாட்டி நூல் வெளியிடப்படுவது அவர்களுக்குக் கிடைக்கின்ற சன்மானமாக கருதுகின்றேன். இந்த சம்பள மீளாய்வு நூலில் அவர்களின் ஊதிய அதிகரிப்புத் தொடர்பான விபரங்கள் அடங்கியுள்ளன. 

2008 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அதாவது 8 வருடங்களின் பின்னர் கூட்டுறவுத்துறைப் பணியாளர்களின் சம்பளம் முதன் முதலாக உயர்த்தப்படுகின்றன. இந்த நாட்டுக்கு பாரிய பங்களிப்பை நல்கிவரும் கூட்டுறவுத் துறை சார்ந்தோர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றேன்.