தலைவருக்காக நரகம் செல்லவும் தயாராக இருந்த பாயிஸ் : என்கிறார் பஷீர் சேகு தாவூத்

 நண்பர் பாயிஸ் எனக்கு முன்பே நமது கட்சியில் அவரது பதின்ம வயது பராயத்தில் பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களின் தனித்துவ அரசியல் கோட்பாடுகளில் கவரப்பட்டும், கருத்துகளில் ஈர்க்கப்பட்டும் போராளியாய் இணைந்து கொண்டவர்.

basheer hakeem rauff bais

 

2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேசிய அமைப்பாளராகவும், பிரதியமைச்சராகவும் பணியாற்றிய போது, நமது கட்சி “வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பு வேளை அரசில் இருந்து எதிர்க்கட்சிக்கு மாறிச் சென்ற போது உடன் சேர்ந்து வராமையால் விலகியவர்.

 

ஆனாலும், தலைவர் றவூப் ஹக்கீம் வாக்கெடுப்பு அன்று அதி காலை வேளை கொழும்பில் பாயிஸின் வீட்டுக்கு சென்று, அரசுடன் இருக்க வேண்டாம் எங்களுடன் வந்துவிடுங்கள் என்று கேட்டபோது, தலைவரை கண்ணியமாக நடாத்தி தனது சிறு வயது மகளை தலைவரின் மடியில் உட்கார வைத்து அழகு பார்த்தது மட்டுமல்லாமல் தனது சங்கடமான, இக்கட்டான நிலைமையை தலைவருக்கு புரியவைத்து அனுப்பினார்.
இப்போது எந்தவித நிபந்தனையுமற்று இணைந்து கொண்டுள்ளார்.

 

 இந்த இடத்தில் கட்சியை விட்டுச் சென்ற பலர் கட்சியின் அதியுயர்பீட உறுப்பினர், பிரதித்தலைவர், தேர்தலில் வேட்பாளர், மாகாண சபை- பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளை நிபந்தனையாக வைத்து மீண்டும் கட்சியில் இணைந்து கொண்டமையோடு பாயிஸின் இணைவை ஒப்பு நோக்கிப் பார்க்கிறேன். இது மட்டுமல்லாது மீளிணைந்தவர்கள் பலர் கட்சிக்கு செய்த பாரிய துரோகங்களையும் பாயிஸ் விலகிய தருணத்தோடு ஒப்பு நோக்குகிறேன்.

 

மேலும்,பாயிஸ் நீண்ட நெடுங்காலம் கட்சியில் தொடர் அங்கத்துவம் வகித்தமையையும் அக்காலத்துக்குள் அவர் செய்த பாரிய பங்களிப்புகளையும் நட்புடன் எண்ணிப் பார்க்கிறேன்.
இப்பங்களிப்புகளில் இன்றைய தலைவருக்கு வழங்கிய இரண்டு உச்ச நிலை பங்களிப்பை கூற விளைகிறேன். அதாவது ஹக்கீம் நோர்வேயில் இருந்த போது அதாஉல்லாஹ் பெரும்பான்மை உச்சபீட உறுப்பினர்களின் ஆதரவோடு முஸ்லிம் காங்கிரசை கைப்பற்ற உச்சபீடக் கூட்டத்தைக் கூட்ட முயன்ற வேளை தன் உயிரையும் துச்சமென மதித்து தாறுஸ்ஸலாத்திற்குள் அதாவை உள் நுழைய விடாமல் தடுத்து அன்றைய கூட்டத்தை வெற்றிகரமாக நடாத்தி ஹக்கீமின் தலையை காப்பாற்றியதில் பாயிஸின் பங்களிப்பு மிகப்பெரியது.

 

இதுமட்டுமன்றி றவூப் ஹக்கீம் அவர்கள் தனிப்பட்ட வகையில் ஒரு விடயத்தில் தப்பமுடியாத படிக்கு அகப்பட்டுக் கொண்டபோது, அதிலிருந்து அவரின் தலையை காக்க பலரும் பலவாறான செயற்பாடுகளில் இறங்கியிருந்த அக்காலத்தில், கட்சியின் நலனில் அக்கறை உள்ள ஒரு முஸ்லிம் பெண் அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையில் றாகம தேவாலயத்தில் இருந்த லொக்கு சீயா என்ற நியாஸ் தெய்யோவிடம் சென்று பரிகார செயலில் ஈடுபட்டால் அகப்பட்டிருக்கும் சிக்கலில் இருந்து விடுபட முடியும் என்ற ஆலோசனையை ஹக்கீமுக்கு வழங்கினார்.

 

 என்ன இழவு செய்தாவது இந்த சிக்கலில் இருந்து தப்பிப்பதன் மூலம் கட்சித் தலைமைப் பதவியை தக்கவைத்தே ஆகவேண்டும் என்ற சூழலில் இருந்த தலைவர் தெய்யோவிடம் சென்ற போது, கூடச்சென்றவர்களில் ஒருவராக நண்பர் பாயிசும் இருந்தார், இச்செயல் ஒரு “சிர்க்” எனப் புரிந்து கொண்டாரோ இல்லையோ உடன் செல்ல அவர் எடுத்த முடிவு அன்று தலைவருக்காக நரகம் செல்லவும் அவர் தயாராக இருந்ததை நிரூபிக்கிறது. எனவே பாயிஸ் என்ன பிழை செய்திருந்தாலும் தலைவர் மன்னித்தே ஆகவேண்டும் என்ற நிலையை காலம் நிரூபித்திருக்கிறது.

 

குறிப்பு:
றாகம தேவாலய லொக்கு சீயா எனும் நியாஸ் தெய்யோ தற்போது உயிரோடு இல்லை. அவரது உடல் அக்கரைப்பற்று கடற்கரையில் ஒதுங்கிக் கிடக்க கண்டு மீட்கப்பட்டது.இவரையும், றாகம தேவாலயத்தின் செயற்பாடுகளையும் காணொளியில் பார்க்க கீழுள்ள லிங்கை க்ளிக் செய்யவும் .

https://www.facebook.com/483381705154183/videos/661473504011668/