பிரித்தானியா அகதிகள் தொடர்பான நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் அகதிகளுக்கு நிதியுதவி

பிரித்தானியா அகதிகள் தொடர்பான நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் நாட்டை விட்டு வெளியேறும் அகதிகளுக்கு 2000 பவுண்ட்ஸ் வழங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளை நோக்கி அகதிகள் படையெடுக்க தொடங்கியுள்ள நிலையில், பிரித்தானிய உள்ளிட்ட நாடுகள் அகதிகள் தொடர்பில் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவை விட்டு வெளியேற இணக்கம் தெரிவிக்கும் அகதிகளுக்கு தலா 2000 பவுண்ட்ஸ் நிதி வழங்கப்படும் என்ற தகவலை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தலைமையிலான அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விடயம் தொடர்பில் அந்நாட்டு உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இது வரையான காலப்பகுதியில் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள குறித்த திட்டத்தின் கீழ் 529 அகதிகள் நிதியுதவி பெற்று வந்துள்ளனர்.

அகதிகள் பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கோ, தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கோ அல்லது சொந்த நாட்டில் சுய தொழிலை ஆரம்பிப்பதற்கோ இந்த நிதி பயன்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானியா அகதிகள் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.