மஹிந்த ராஜபக்ஷவை தலைமைத்துவமாக கொண்ட புதிய கட்சி விரைவில் அறிவிக்கப்படும் !

mahinda_rajapaksa_3_5முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தலைமைத்துவமாக கொண்ட  புதிய கட்சி ஒன்று குறித்து விரைவில் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க் கட்சியின்  புதிய அரசியல் கட்சிக்கான நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகவும்  உள்ளுராட்சி மன்ற தேர்தலை எதிர் கொள்வதற்கான இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த ஆதரவு அணியினர் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை கட்சியின் நிறம் மற்றும் சினனத்தின் இரகசிய தன்மையை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டும் என  கூட்டு எதிர் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவத்தில் முக்கிய அதிகாரிகளாகச் செயற்பட்டு ஓய்வுப்பெற்றவர்களை தேர்தல் நடவடிக்கைகளில் களமிறக்குவது குறித்தும் இங்கு திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க்  கட்சியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் சந்திப்பு   நேற்று மாலை 6.30 மணிக்கு இடம்பெற்றது. இதன் போது இவ் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. 

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை எவ்வாறு ஆட்சி மாற்றத்திற்கான ஆரம்பமாக மாற்றலாம் என்று மகிந்த ஆதரவு அணியினர் பேசிக்கொண்டனர். அத்துடன் தற்போதைய  அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுப்பது தொடர்பான விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டன 

குறிப்பாக புதிய கட்சியை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தல் மற்றும் அதனை பிரதான கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் மாற்றுதல் மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் ஏற்பாடுகள் குறித்தும் மகிந்த அணியினர் கலந்துரையாடினர். 

இதேவேளை  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  பங்காளி கட்சிகள் புதிய கட்சி ஒன்றை அமைத்து அதன் ஊடாக எதிர் வரும் தேர்தல்களில் போட்டியிடுவோம்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்விற்கு அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும புதிய கட்சி குறித்து தெளிவுப்படுத்துகையில் தெரிவித்துள்ளார். 

கூட்டு எதிர்க் கட்சியை  அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டிய தேவை தொடர்பில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.  அத்துடன் கட்சியின் சின்னம் மற்றும் நிறம் என்பவை தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.