ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை அமெரிக்கா நோக்கி செல்லவுள்ளார்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 71 வது பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை அமெரிக்கா நோக்கி செல்லவுள்ளார். 

வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற சீர்திருத்த அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்ட குழுவினரும் ஜனாதிபதியுடன் அங்கு செல்ல உள்ளனர். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் கூட்டத் தொடரில் எதிர்வரும் 21ம் திகதி உரையாற்றவுள்ளார். 

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். 

அதேநேரம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தற்போதைய பொதுச் செயலாளர் பான் கீ மூனின் இறுதி கூட்டத் தொடர் இதுவாகும். 

சுமார் கடந்த 10 ஆண்டுகளாக பான் கீமுன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளராக பதவி வகிக்கின்றார்.