ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி வேட்டை

mahintha maithri srilanka president

 அதி­ரடி வேட்­டை­யொன்று நடை­பெற்­றுள்­ளது… நுகே­கொடை உள்­ளிட்ட நாட்டின் மூன்று பிர­தே­சங்­களில் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு ஆத­ரவு வழங்கும் கூட்­டங்கள்…. ஹைட்பார்க் கூட்டம் மற்றும் கண்­டி­யி­லி­ருந்து கொழும்­புக்­கான பாத­யாத்­திரை… இவற்­றின்­போது இடம்­பெ­றாத அதி­ரடி வேட்­டை­யொன்றை தற்­போது நடந்­தே­றி­யுள்­ளது.

ஒரு­சிலர் இவ்­வாறு அதி­ர­டி­யாக சில விட­யங்கள் நடை­பெறும் என எதிர்­பார்த்­தி­ருந்­த­போதும் தற்­போது பெரும்­பா­லானோர் எதிர்­பார்க்­காத வகையில் இந்த அதி­ரடி நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு புதி­தாக 40 தொகுதி மற்றும் மாவட்ட அமைப்­பா­ளர்கள் கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். 

இவ்­வாறு 40 அமைப்­பா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டமை ஒரு­பெ­ரிய விவ­கா­ரமே அல்ல. ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து தெரிவு செய்­யப்­பட்டு தற்­போது கூட்டு எதி­ர­ணியில் அங்கம் வகிக்கும் 13 பேரின் அமைப்­பாளர் பத­விகள் ஜனா­தி­ப­தி­யினால் பறித்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. 

இதுவே தற்­போது நாட்டின் அர­சியல் களத்தில் ப­ர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அந்­த­வ­கையில் உடன் அமு­லுக்கு வரும் வகையில் 40 புதிய அமைப்­பா­ளர்­களும் சுதந்­தி­ரக்­கட்­சிக்கு ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். அதா­வது, புதிய மாவட்ட அமைப்­பா­ளர்­க­ளாக 24 பேரும் தொகுதி அமைப்­பா­ளர்­க­ளாக 16 பேருமே இவ்­வாறு ஜனா­தி­ப­தி­யினால் புதி­தாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். 

விசே­ட­மாக கூட்டு எதிர்க் கட்­சியில் செயற்­பட்­டு­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல, பவித்ரா வன்­னி­யா­ரச்சி,ரோஹித அபே­கு­ண­வர்­தன, சீ.பீ. ரத்­நா­யக்க, மஹிந்த யாப்பா அபே­வர்­தன, ஜகத் பால­சூ­ரிய, காமினி லொக்­குகே மற்றும் சரத்குமார உள்­ளிட்­ட­வர்­களின் அமைப்­பாளர் பத­விகள் பறித்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. 

எதிர்­வரும் 4 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 65 ஆவது சம்­மே­ளனம் குரு­நாகல் நகரில் இடம்­பெ­ற­வுள்­ளது. இதற்­கான தயார் படுத்­தல்­களில் சுதந்­திரக் கட்­சியின் ஏற்­பாட்டு குழு­வினர் தீவி­ர­மாக செயற்­பட்டு வந்த நிலையில், மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு ஆத­ர­வ­ளித்­து­வரும் முக்­கி­யஸ்­தர்கள் சுதந்­திரக் கட்­சியின் அமைப்­பாளர் பத­வி­யி­லி­ருந்து அதி­ர­டி­யாக நீக்­கப்­பட்­டுள்­ளனர். 

இந்­நி­லையில் இவ்­வாறு ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து முக்­கி­யஸ்­தர்கள் பலர் நீக்­கப்­பட்­டுள்­ள­மை­யா­னது எவ்­வா­றான தாக்­க­ங்­களை ஏற்­ப­டுத்தும் என்­பது குறித்து பல்­வேறு கோணங்­களில் ஆராய வேண்­டி­யுள்­ளது. அதா­வது மஹிந்த அணியில் செயற்­படும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக இவ்­வாறு நட­வ­டிக்கை எடுத்­த­மை­யா­னது எவ்­வ­கை­யான தாக்­கங்­களை ஏற்­ப­டுத்தும் என்பது குறித்து ஆராய வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி என்­பது நாட்டின் பழம்­பெரும் கட்சி என்­ப­துடன் சுதந்­தி­ரத்­திற்கு பின்னர் நாட்டை நிர்­வ­கித்­ததில் முக்­கிய பங்கை வகிக்­கின்­றது. இந்­நி­லையில் இக் கட்சி அவ்­வப்­போது ஒவ்­வொரு கால­கட்­டத்திலும் வீழ்ச்­சி­க­ளையும் வளர்ச்­சி­க­ளையும் கண்டு வந்­துள்­ளது. 

குறிப்­பாக 1977 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னது மிகவும் வீழ்ச்­சி­யான நிலை­மைக்கு சென்­றது. பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சி அந்­தஸ்­தைக்­கூட பெற்றுக் கொள்­ள­­மு­டி­யாத நிலை­மைக்கு ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி தள்­ளப்­பட்­டது. அதனையடுத்து 17 வருட போராட்­டங்­களின் பின்னர் 1994 ஆம் ஆண்டு அறுதிப் பெரும்­பான்­மை­யின்றி பல்­வேறு கூட்­டணிக் கட்­சி­களை இணைத்துக் கொண்டு சுதந்­திரக் கட்சி பத­விக்கு வந்­தது. 

இந்­நி­லையில் தற்­போது சுதந்­திரக் கட்சி தேசிய அர­சாங்­கத்தில் பங்­கெ­டுத்­துள்­ள­போ­திலும் பல­மான நிலையில் இல்லை என்­பதை ஏற்றுக் கொள்­ள­வேண்டும். கடந்த தேர்­தலில் சுதந்­திரக் கட்சி வெற்­றி­பெ­ற­வில்லை. இவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் முக்­கி­யஸ்­தர்கள் பலர் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்­ளமை கட்சி என்ற ரீதியில் சுந்­திரக் கட்­சிக்கு குறிப்­பி­டத்­தக்­க­ளவு பாத­க­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்­பதில் சந்­தேகம் இல்லை. 

ஆனால் நாடு என்ற ரீதியிலும் எதிர்­கால முன்­னேற்றம் என்ற வகையிலும் பார்க்­கும்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஒரு முக்­கி­ய­மான நட­வ­டிக்­கையை எடுத்­துள்ளார் என்று கூற முடியும். அதா­வது சுதந்­திரக் கட்­சியின் அமைப்­பா­ளர்­க­ளாக பதவி வகித்த வண்ணம் கூட்டு எதி­ர­ணியில் அங்கம் வகித்துக் கொண்டு அர­சாங்­கத்தின் அனைத்து வித­மான செயற்­பா­டு­க­ளையும் எதிர்த்து வரு­கின்ற நிலையில் ஜனா­தி­பதி இவ்­வாறு 13 பேரை பதவி நீக்கம் செய்­தி­ருக்­கின்றார். 

அதா­வது ஜனா­தி­ப­தியைப் பொறுத்­த­வ­ரையில் தனது நிகழ்ச்சி நிரலில் முத­லா­வதாக நாட்­டுக்கே முன்­னு­ரிமை கொடுப்­ப­தா­கவும் அதன்­பின்­னரே கட்­சிக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­படும் என்றும் அடிக்­கடி கூறி­வ­ரு­கின்றார். அந்­த­வ­கையில் தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்­டுக்கு முன்­னு­ரிமை கொடுத்து இந்த அதி­ரடி நட­வ­டிக்­கை­யினை மேற்­கொண்­டுள்ளார் என்­பதை ஊகிக்க முடி­கின்­றது. 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்­களை தன்­ன­கத்தே கொண்­டுள்ள கூட்டு எதி­ர­ணி­யா­னது அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை கடு­மை­யாக எதிர்த்து வரு­கின்­றது. குறிப்­பாக அர­சாங்­கத்­தினால் நிறு­வப்­ப­ட­வுள்ள காணாமல் போனோர் குறித்த நிரந்­தர அலு­வ­ல­கத்தை கூட்டு எதி­ர­ணி­யினர் கடு­மை­யாக எதிர்த்து வரு­கின்­றனர். 

எதிர்­கால நல்­லி­ணக்­கத்தில் முக்­கிய மைல் கல்­லாக கரு­தப்­படும் இந்த காணாமல் போனோர் குறித்த அலு­வ­ல­க­மா­னது ஒரு சில தரப்­பி­னரால் எதிர்ப்­புக்­குட்­ப­டு­வது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். அதுவும் இந்த நாட்டில் நல்­லி­ணக்­கத்­தையும் தேசிய ஒற்­று­மை­யையும் உரு­வாக்­குவேன் என்று சப­த­மிட்டு பத­விக்கு வந்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு இவ்­வாறு கூட்டு எதி­ர­ணி­யினர் காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தை எதிர்க்­கின்­றமை கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் என்­பதில் சந்­தேகமில்லை. 

எனவே நாட்டின் எதிர்­கால நலனை கருத்திற் கொண்டு ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன இந்த அதி­ரடி பதவி நீக்க நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள்ளார் என்­பது தெளி­வா­கின்­றது. ஆனால் இவ்­வாறு பதவி நீக்கம் செய்­ய­ப்பட்­டுள்­ள­வர்­களும் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்கள் என்­பதால் கட்­சிக்கு ஒரு­வித தாக்கம் ஏற்­படும் என்­பதை புரிந்­து­கொள்ள வேண்டும். ஸ்ரீலங்கா சுத­ந்­திரக்கட்­சிக்கு தாக்கம் ஏற்­ப­டும் என்­ப­துடன் மறு­புறம் பதவி விலக்­கப்­பட்ட 13 பேருக்கும் இது சடு­தி­யான வீழ்ச்சி என்றே கூற முடியும். சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என்­னதான் பிர­ப­ல­மா­ன­வர்­க­ளாக இருந்­தாலும் சுதந்­திர கட்சி என்ற தலைப்பின் கார­ண­மா­கவே அந்த நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. தற்­போது சுதந்­திரக் கட்­சியின் அமைப்­பாளர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவர்­களின் எதிர்­காலம் எவ்­வாறு அமையும் என்­பதும் சிந்­திக்­கப்­பட வேண்­டிய விட­ய­மாகும். 

இவ்­வாறு பதவி நீக்கம் செய்­யப்­பட்­டுள்ள நிலையில் மஹிந்த அணி­யினர் புதிய கட்சி ஒன்றை ஆரம்­பிக்கப் போகின்­றார்­களா என்­பது தற்­போது பர­வ­லாக பேசப்­படும் விட­ய­மாக மாறி­யுள்­ளது. மேலும் புதிய கட்சி ஒன்றை ஆரம்­பிப்­பது தொடர்­பாக மஹிந்த அணி­யி­னரும் அவ்­வப்­போது தக­வல்­களை கசி­ய­விட்ட வண்­ண­முள்­ளனர். 

பாத­யாத்­திரை ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர் மஹிந்த அணி­யினர் புதிய கட்­சியை ஆரம்­பிக்­கப்­போ­கின்­றனர் போன்ற தோற்­றப்­பா­டுகள் வெளிக்­காட்­டப்­பட்டு வந்த போதிலும் இறு­தியில் அந்த முயற்­சிகள் பின்­வாங்­கப்­பட்­டன. 

எவ்­வா­றா­யினும் எமது நாட்.டில் புதிய கட்­சி­களை ஆரம்­பித்து வெற்­றி­பெறும் வர­லா­றா­னது மிகவும் அரி­தா­கவே பதி­வா­கி­யுள்­ளது. பிரே­ம­தாச காலத்தில் ஐக்­கிய தேசிய கட்­சி­யி­லி­ருந்து சில முக்­கி­யஸ்­தர்கள் விலகி புதிய கட்­சியை ஆரம்­பித்­தனர். காலப்­போக்கில் அந்த கட்சி காணாமல் போனது. 2007 ஆம் ஆண்டு சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து வில­கிய மங்­கள சம­ர­வீர புதிய கட்­சியை ஆரம்­பித்தார். ஆனால் இறு­தியில் அதனை விட்­டு­விட்டு ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்­து ­கொண்டார். 

இவ்­வாறு பிர­தான கட்­சி­க­ளி­லி­ருந்து விலகி புதிய கட்­சி­களை ஆரம்­பிக்கும் செயற்­பா­டா­னது அந்­த­ளவு வெற்­றி­க­ர­மா­னது என கூற­மு­டி­யாது. ஆனாலும் மஹிந்த அணி­யினர் எவ்­வாறு அடுத்­த­கட்ட அர­சியல் நகர்­வு­களை முன்­னெ­டுக்கப் போகின்­றனர் என்­பது கேள்­விக்­கு­றி­யாகவே உள்­ளது. 

ஆனாலும் மற்­று­மொரு கோணமும் இங்கு இருக்­கின்­றது. அதா­வது இவ்­வாறு அதி­ர­டி­யாக சுத­ந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் அமைப்­பாளர் பத­வி­க­ளி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­மை­யா­னது இவர்­களை மைத்­திரி தரப்­பினர் தம்­பக்கம் இழுத்­துக்­கொள்ளும் முயற்­சி­யா­கவும் இருக்­கலாம்.

அதா­வது சுதந்­திரக் கட்சி இல்­லா­விடின் தமக்கு எதிர்­காலம் இல்லை என்­ப­தனை உணர்ந்து பதவி நீக்­கத்தை அடுத்து பதவி நீக்­கப்­பட்­ட­வர்கள் மஹிந்த அணியை கைவிட்டு மைத்­திரி அணியின் பக்கம் செல்­வ­தற்­கான சாத்­தி­யங்­களும் இல்­லாமல் இல்லை. எவ்­வா­றெ­னினும் இந்த விட­யங்கள் தூர­நோக்கின் அடிப்­ப­டையில் ஆரா­யப்­பட வேண்­டி­ய­வை­யாகும். அடுத்த அடுத்த அர­சியல் நகர்­வுகள் இவற்­றுக்­கான விடையை கொடுக்கும் என எதிர்­பார்க்­கலாம். 

இதே­வேளை இது தொடர்பில் அமைப்­பாளர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்ட ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­த­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல கீழ்­க்கண்­ட­வாறு கூறு­கிறார். 

அதா­வது “”ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் அமைப்­பாளர் பத­வியில் இருந்து நீக்­கப்­பட்­டமை மிகவும் மகிழ்ச்­சி­யாக உள்­ளது. எனவே தற்­போது எவ்­வி­த­மான தயக்­கமும் இன்றி நல்­லாட்சி அர­சாங்­கத்தின் சர்­வ­தேச அடி­மைத்­த­னத்தை நாட்டு மக்­க­ளுக்கு எடுத்­து­ரைத்து நீதி­கோ­ரலாம். சுதந்­திர கட்­சியின் அர­சியல் ரீதி­யி­லான பழி­வாங்கல் தொடர்பில் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் தீர்­மானம் எடுப்போம். கட்­சியில் இருந்து நீக்­கி­னாலும் அர­சாங்­கத்­திற்கு எதி­ரான போராட்­டத்தை கைவிடப் போவ­தில்லை. 

கூட்டு எதிர்க்கட்­சியில் செயற்­படும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­களின் அமைப்­பா­ளர்கள் பத­விகள் இரத்து செய்­யப்­பட்­டுள்­ள­மை­யை­யிட்டு நாங்கள் மகிழ்ச்சி அடை­கின்றோம். ஏனெனில் தற்­போது நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டில் வலு­வா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் செயற்­பட முடியும். குறிப்­பாக தற்­போ­தைய அர­சாங்­கத்தின் சர்­வ­தேச அடி­மைப்­போக்கை எதிர்த்து செயற்­பட முடியும்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் அர­சாங்கம் நாட்டை காட்டிக் கொடுத்­துள்­ளது. காணாமல் போன­வர்கள் தொடர்­பான சட்ட மூலத்தை நிறை­வேற்றி அலு­வ­ல­கத்தை ஸ்தாபித்து இரா­ணு­வத்தை சர்­வ­தே­சத்­திற்கு பலி­யாக்க அர­சாங்கம் முற்­ப­டு­கின்­றது. அமெ­ரிக்கா மற்றும் நோர்வே உள்­ளிட்ட மேற்­கு­லக சக்­திகள் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை பாராட்­டு­கின்­றன. 

இவற்­றுக்கு எதி­ராக இனி கடு­மை­யாக செயற்­பட முடியும் . முன்பு கட்சி அமைப்­பாளர் பத­வி­களில் இருந்­த­மை­யினால் சில கட்­டுப்­பா­டு­க­ளுடன் செயற்­பட்டோம். தற்போது அந்த நிலை இல்லை. எவ்வாறாயினும் மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் கூடி எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆராய உள்ளோம். இந்த சந்திப்பு விரைவில் நடைபெறும்”” என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டின் அரசியல் நகர்வுகள் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதியிலிருந்து பரபரப்பாகவே காணப்படுகின்றன. மஹிந்த அணியினரும் தொடர்ச்சியாக அரசாங்கத்துக்கு எதிரான போக்கை கடைப்பிடித்துவருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒன்றரை வருட காலமாக கட்சியின் விடயத்தில் பொறுமையாக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 13 பேரை தற்போது அதிரடியாக நீக்கியுள்ளமையானது எதிர்வரும் காலங்களில் அரசியல் சூழல் சூடு பிடிக்கும் என்பதனையே கோடிட்டுக்காட்டுகின்றது. 

 
   நன்றி – வீரகேசரி