சவுதியில் முகமூடி அணிந்த மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டில் போலீஸ்காரர் பலி!

dd0da651-26ff-47ce-92ca-c8b38ccfbff8_16x9_600x338எண்ணெய்வளம் மிக்க சவுதி அரேபியா நாட்டில் சன்னி பிரிவை சேர்ந்த முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். ஷியா பிரிவினர் சிறுபான்மையினத்தவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பகுதியினர் குவாட்டிஃப் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள குவாட்டிஃப்  நகரில் இன்று அதிகாலை காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரை முகமூடி அணிந்த நான்கு மர்ம நபர்கள் தடுத்து நிறுத்தினர். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அவரை துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்ற அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஷியா பிரிவினர் கணிசமாக வாழும் பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவுடன் சிலர் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக சவுதி அரேபியா அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.