வாய் மூல சமர்ப்பணம் செய்ய அனுமதிக்குமாறு மக்கள் காங்கிரஸ் நீதிபதியிடம் கோரிக்கை

 

சுஐப் எம் காசிம்

 

 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் சுபைர்தீன்,கட்சியின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டமையை ஆட்சேபித்து அக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் வை எல் எஸ் ஹமீத், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில்தொடர்ந்திருந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு இன்று (4) எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதி வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி வரை ஒத்திவைத்திருந்தார்.

கட்சியின் செயலாளராக சுபைர்தீன் நியமிக்கப்பட்டமையை ஆட்சேபித்து மனுதாரரான வை எல் எஸ் ஹமீத் கட்டாணை (ENJOINING) பிறப்பிக்குமாறு மாவட்ட மன்றில் முன்னர் தொடர்ந்திருந்த வழக்கை நீதவான் ஏற்க மறுத்து இரண்டு தரப்பாரும் எழுத்து மூல சமர்ப்பணத்தை சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தார். 

இந்த வழக்கு விசாரணை மீண்டும் புதிதாக நியமிக்கப்பட்ட நீதவான் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. 

எதிர்த் தரப்பு சார்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் பிரதியமைச்சர் அமீர் அலி, செயலாளர் எஸ் சுபைர்தீன் உட்பட கட்சியின் உயர்பீடத்தைச் சேர்ந்த பதினைந்து பேர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, சட்டத்தரணிகளான ஹிஜாஸ் அஹமட், ருஸ்தி ஹபீப் ஆகியோர் மீண்டும் இந்த வழக்கு தொடர்பில் வாய்மொழி மூல சமர்ப்பணம் செய்ய ”மன்று அனுமதி தரவேண்டும்” எனவும்இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி புதியவராக இருப்பதாலேயே இந்தக் கோரிக்கையை தாங்கள் விடுப்பதாகவும் வேண்டினர்.

இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் 05 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்த வழக்கை தொடர்ந்த மனு தாரரான வை எல் எஸ் ஹமீத் இன்று நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.