“இந்த நேரத்தில் யார் வான வெடிகளை கொழுத்துகின்றனர்” என்று கேட்ட மஹிந்த ராஜபக்சே

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது செல்போனில் சாலாவ ஆயுத கிடங்கு வெடித்த சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

கொஸ்கம சாலாவ ஆயுத கிடங்கு வெடித்த கடந்த 5 ஆம் திகதி கொழும்பு ஆஷா சென்றல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தவுல்தென ஞானசார தேரரின் நலன் விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார ஆகியோரும் சென்றிருந்தனர்.

தவுல்தென ஞானசார தேரரின் நலன் விசாரித்த பின்னர், வைத்தியசாலையின் மேல் மாடியில் சிகிச்சை பெற்று வந்த குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்கவை பார்க்க சென்றுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி, சாலிந்த திஸாநாயக்கவின் நலன் விசாரித்து, அறை உள்ள ஜன்னல் வழியாக வெளியில் நடப்பதை பார்த்துள்ளார்.

வெளியில் அங்காங்கே புகையையும் சில வெளிச்சத்தையும் கண்ட முன்னாள் ஜனாதிபதி, “இந்த நேரத்தில் யார் வான வெடிகளை கொழுத்துகின்றனர்” எனக் கூறியவாறு வெடிப்புச் சம்பவத்தை தனது செல்போன் வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியுடன் சென்றிருந்த உதித்த லொக்குபண்டார மற்றும் பந்துல குணவர்தன ஆகியோரும் சம்பவத்தை தமது செல்போனில் பதிவு செய்துள்ளனர்.