அநுராதபுர மாவட்டத்திற்கு பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளமை ஒரு வரலாற்றுச் சாதனையாகும்: ஏ ஆர் இஷாக்

அநுராதபுர முஸ்லிம் மக்களின் சரித்திரத்தை மாற்றிய புருஷராக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை நாங்கள் அடையாளங் கண்டுள்ளோம் என்று அநுராதபுர மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஏ ஆர் இஷாக் தெரிவித்தார். 

7M8A6992_Fotor

மூதூரில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய இஷாக் எம் பி மேலும் கூறியதாவது,

அநுராதபுர மாவட்ட மக்கள் அரசியலில் நீலம், பச்சை, மஞ்சள் பச்சை, என்று முன்னர் அலைந்து திரிந்தனர். மாற்றாரின் கட்சிகளுக்கு ஜயவேவா போடுகின்ற சமூகமாக, மற்றைய அரசியல்வாதிகளிடம் கையேந்தும் சமூகமாக வாழுகின்ற காலம் மலையேறி தற்போது தமது சொந்தக் காலில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது. 

சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் இந்த மாவட்டத்திற்கு விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனும் தவிசாளர் அமீரலியும் அரசியல் அநாதைகளாக இருந்த முஸ்லிம் சமூகத்தின் அவலங்களைக் கண்டு வெதும்பியதன் விளைவே இன்று அந்த மாவட்டத்திற்கு கிடைத்துள்ள பாராளுமன்றப் பிரதிநித்துவம்.

சுதந்திரத்திற்குப் பின்னர் அநுராதபுர மாவட்டத்திற்கு பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளமை ஒரு வரலாற்றுச் சாதனையாகும். அத்துடன் பாராளுமன்றத்திலும் இது சாதனையாக பதியப்பட்டுள்ளது.

அரசியல் நுணுக்கங்களாலும் அரசியல் நகர்வுகளாலும் இந்தப் பிரதிநித்துவத்தை வென்றெடுத்த பெருமை ரிஷாட் பதியுதீனையே சாரும். 

சுமார் இருபத்தையாயிரம் முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட அநுராதபுர மாவட்டத்தில் நான் பெற்ற வாக்குகள் சுமார் நாற்பத்தெட்டாயிரம் ஆகும். அமைச்சர் ரிஷாட்டின் வழிகாட்டலும் எங்கள் மக்களின் உழைப்புமே இவ்வாறான ஒரு பெறுபேறை அடைவதற்கு உதவியது.

பணத்துக்காகவோ உழைக்க வேண்டுமென்பதற்காகவோ நான் அரசியலுக்கு வரவில்லை. அநுராதபுர மாவட்ட மக்களின் கஷ்டங்களை பொறுக்க முடியாதே நான் அரசியலுக்குள் நுழைந்த்தேன். இறைவன் எனக்கு அனைத்து செல்வங்களையும் தந்துள்ளான். பாராளுமன்றத்தில் இந்த ஐந்து வருட பதவிக்காலத்தில் எனக்குக் கிடைக்கும் சம்பளத்தை ஏழை மக்களுக்கு, குறிப்பாக அநுராதபுர மாவட்டத்தில்லுள்ள சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்தேன். இப்போது அதனை செயலுறுப்படுத்தி வருகின்றேன்.

மூதூர் மக்களைப் பொறுத்தவரையில் உங்களிடம் அரசியல் ரீதியான ஒற்றுமை அவசியமாகின்றது. பிரிந்து பிரிந்து நின்றால் நீங்கள் தொடர்ந்தும் பின்னடைவாகவே இருக்க வேண்டி வரும். உங்கள் தலையெழுத்தை நீங்கள் மாற்ற வேண்டும். நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் நிச்சயமாக இந்தப் பிரதேசத்தில் ஒரு மக்கள் பிரதிநிதியைப் பெற்றுக் கொள்ள முடியும். எதிர்வரும் காலங்களில் உங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளுங்கள் என்றார். 

7M8A6985_Fotorஇந்தக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் அமீர் அலி, எம் எச் எம் நவவி எம் பி ஆகியோர் கலந்து கொண்டனர்.