எதையும் சரிவரச் செய்ய முடியாத அரசாங்கம் : பவித்ரா வன்னியாராச்சி விசனம் !

இந்த அரசாங்கம் மக்களை ஏமாற்றும் ஒரு பொழுதுபோக்கு அரசாங்கம் என்றும், எதையும் சரிவரச் செய்ய முடியாத அரசாங்கம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி விசனம் வெளியிட்டார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் நடத்திய ஊடகவியளாலர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

pavithra_vanni_1

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றவில்லை, தொடர்ந்தும் மக்களை ஏமாற்றிக் கொண்டே வருகின்றது, அதுமட்டுமின்றி நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது, நல்லாட்சி என்று கூறிக்கொண்ட இந்த அரசாங்கம் மக்களுக்கென எந்த நன்மைகளையும் செய்யவில்லை என பவித்ரா வன்னியாராச்சி குற்றம் சுமத்தினார். 

மேலும் நெல் மற்றும் இறப்பர் பயிர்ச் செய்கைகளில் வீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் கஷ்டத்தில் இருப்பதாகவும், பசி பட்டினியால் வாடுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கடந்த சில நாட்களாக நாட்டில் அடிக்கடி மின்சாரம் தடைப்படுகின்றது, டிரான்ஸ்போமர் வெடிப்பதால் எவ்வாறு நாடு முழுவதும் மின்சாரம் தடைப்படும்? இவ்வாறு ஒரு இடத்தில் டிரான்ஸ்போமர் வெடித்தாலும் மாற்று வழிகள் எத்தனையோ உள்ளன. அரசு ஏன் அதை செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தான் மின்சக்தி அமைச்சராக இருந்த போது நாடு முழுதும் மின்சாரத் தடை ஏற்படும் அளவுக்கு பாரதூரமான சம்பவங்கள் எதும் நடைபெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி இதன்போது தெரிவித்தார்.