தனி முஸ்லிம் மாகாணமும் ‘கற்றுக் குட்டி’ அரசியலும் !!

basheer-cegu-thavuth_Fotor_Collage_Fotor

முஸ்­லிம்­களின், தனி முஸ்லிம் மாகாணக் கோரிக்கை என்­பது தனி­நாடு என்­கின்ற அள­வுக்கு பெருப்­பித்துக் காண்­பிக்­கப்­ப­டு­கின்ற இன்­றைய கால­கட்­டத்தில், சமூக அர­சி­யலில் கற்­றுக்­குட்­டிகள் விடு­கின்ற அறிக்­கை­களும் அவர்கள் செய்­கின்ற அர­சி­யலும் அபத்­த­மாக தெரிகின்­றன. கற்­றுக்­குட்­டிகள் என்போர், இன்னும் கற்­றுத்­தே­றாத, ஆழ அக­லங்­களை அறிந்­தி­ராத, பயில்­நிலை நபர்கள் என்று அக­ரா­தியின் அடிப்­ப­டையில் வரை­யறை செய்ய முடியும். அப்­படிப் பார்த்தால் இலங்கை முஸ்லிம் சமூ­கத்­திற்குள் உண்­மை­யான கற்றுக் குட்­டி­களும் இருக்­கின்­றார்கள், எல்­லா­வற்றையும் நன்கு கற்­ற­றிந்து வைத்துக் கொண்டு தம்மை கற்­றுக்­குட்­டிகள் போல வெளியே காட்டிக் கொள்­கின்­ற­வர்­களும் இருக்­கின்­றார்கள். எவ்­வா­றி­ருப்­பினும், இக் கட்­டு­ரையில் நானாக யாரையும் கற்­றுக்­குட்டி என்றோ, கற்­ற­றிந்தோர் என்றோ வரை­யறை செய்யப் போவ­தில்லை. மாறாக, வாச­கர்­க­ளா­கிய பொதுமக்­களின் பார்­வைக்கே அதனை விட்­டு­வி­டு­கின்றேன். 

நாட்டில் புதி­ய­தொரு அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான பூர்­வாங்க வேலைகள் மும்­மு­ர­மாக இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இவ் அர­சி­ய­ல­மைப்பே இன்­றி­ருக்­கின்ற தலை­மு­றை­யையும் இனி­வரும் தலை­மு­றை­யையும் ஆளு­வ­தற்­கான அடிப்­படை முன்­மொ­ழி­வு­களை கொண்­டி­ருக்கப் போகின்­றது. குறிப்­பாக, வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை மீண்டும் இணைப்­பதா இல்­லையா என்ற விடயம், தமி­ழர்­க­ளுக்­கான தீர்­வுத்­திட்டம், சமஷ்டி முறை, தேர்தல் முறைமை மறு­சீ­ர­மைப்பு மற்றும் முஸ்லிம் மாகாணம் அல்­லது முஸ்லிம் அலகு உள்­ள­டங்­க­லாக தற்­போ­தி­ருக்­கின்ற பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்­கான சட்ட ஏற்­பா­டு­களை உத்­தேச அர­சி­ய­ல­மைப்பு கொண்­டி­ருக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

இதில் முக்­கி­ய­மா­னது தமி­ழர்­களின் நெடுங்­கால பிரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்­ட­மாகும். முத­லா­வது சிறு­பான்மை இன­மான தமி­ழர்­க­ளுக்கு தீர்­வுத்­திட்டம் ஒன்று உட­ன­டி­யாக வழங்­கப்­பட வேண்டும் என்­பதில் ஒரு சிறு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆயினும் இரண்­டா­வது சிறு­பான்மை இன­மான முஸ்­லிம்­களும் சம­கா­லத்தில் திருப்­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அந்த வகை­யி­லேயே, முஸ்­லிம்­களின் தனி மாகாண கோரிக்கை கவ­னிப்பை பெறு­கின்­றது. நிலத்­தொ­டர்­பற்ற முஸ்லிம் மாகாண கோரிக்கை என்­பது 35 வரு­டங்கள் தொன்­மை­யா­னது. அர­சி­ய­ல­மைப்பினூடாக தமி­ழர்­க­ளுக்­கான தீர்வுப் பொதி தயா­ராகிக் கொண்­டி­ருக்­கின்ற இன்­றைய காலத்தில் அது மீள வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது. இதை முஸ்லிம் சமூ­கத்­திற்குள் ஒவ்­வொ­ரு­வரும் வேறு கோணத்தில் பார்­க்கின்­றனர். 

வலி­யு­றுத்­து­தலும் விமர்­ச­னமும் 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­மையால் இன்­று­வ­ரைக்கும் தேசி­யப்­பட்­டியல் எம்.பி. மறுக்­கப்­பட்டு ஒதுக்கி வைக்­கப்­பட்­டுள்ள அக்­கட்­சியின் பொதுச் செய­லாளர் ஹசன்­அலி, தவி­சாளர் பஷீர் சேகு­தாவூத் போன்ற ஒரு சிலரே அண்­மைய நாட்­களில் தனி முஸ்லிம் மாகாணக் கோரிக்கை பற்­றிய கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருக்­கின்­றனர். அமைச்சுப் பத­வி­களை சுகித்துக் கொண்டும் தம்மை தேசிய தலை­மைகள் என்று சொல்­லிக்­கொண்டும் அர­சியல் செய்­கின்ற மு.கா. தலை­வரோ, மக்கள் காங்­கிரஸ் தலை­வரோ இதுபற்றி மூச்­சுக்­காட்­டவில்லை. இதே­வேளை வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­டு­மாக இருந்தால், அதற்குள் நிலத் தொடர்­பற்ற முஸ்லிம் மாகாணம் அல்­லது குறைந்த பட்சம் முஸ்லிம் அலகு ஒன்றைத் தர வேண்­டு­மென்ற கோரிக்­கையை சிலர் விமர்­சிக்­கவும் தலைப்­பட்­டுள்­ளனர். 

இதில் முத­லா­மவர் முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அஷ்­ரஃபின் புதல்வர் அமான் அஷ்ரஃப். கட்­சியின் தவி­சாளர் சேகு­தாவூத், தனி மாகாண கோரிக்­கையை விடுத்­ததை ஆட்­சே­பித்து அவர் கடிதம் எழு­தி­யுள்ளார். இவ்­வா­றான ஒரு (தனி­நாட்டு) கோரிக்­கை எனது தந்தை முன்­வைக்­க­வில்லை. பிரிக்­கப்­ப­டாத ஐக்­கிய இலங்­கைக்குள் முஸ்லிம் மாகாணம் ஒன்­றையே அவர் கோரினார் என்று அமான் குறிப்­பிட்­டுள்ளார். தமி­ழர்­க­ளுக்கு தனி­நாடு வழங்­கப்­ப­டு­மாக இருந்தால் அதே­போன்ற ஒரு நாடு தமக்கும் வழங்­கப்­பட வேண்டும் என ஆரம்­பத்தில் அஷ்ரஃப் சொன்­னாலும் பின்னர் தனது நிலைப்­பாட்டை மாற்றிக் கொண்­ட­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

மறைந்த தலை­வரின் புதல்வர் என்­பதைத் தவிர வேறெந்த அர­சியல் அடை­யா­ளத்­தையும் அமான் வளர்த்துக் கொண்­ட­தாக தெரிய­வில்லை. தந்­தையின் மறை­வுக்குப் பின்னர் ஊட­கங்­க­ளுக்கோ சமூ­கத்­திற்கோ முதன்­மு­த­லாக இப்­போ­துதான் அவர் எதை­யா­வது சொல்­லியும் இருக்­கின்றார். தனது தந்­தையின் மர­ணத்­திற்­கான கார­ணத்தை கண்­ட­றி­வ­தற்­காக குரல் கொடுக்­காத அவர், தனது தந்­தையின் பாதை­யி­லன்றி வேறு வழியில் மு.கா. பய­ணிப்­பதை கண்­டு­கொள்­ளாத அவர், தலை­வரின் மர­ணத்­திற்குப் பின்னர் இந்த சமூ­கத்­திற்கு ஏற்­பட்ட அவ­லங்­களின் போது வாயையே திறக்­காத அஷ்­ரஃபின் மகன் இப்­போது மட்டும் வாயைத் திறந்­தி­ருப்­பது ஆச்­ச­ரி­ய­ம­ளிக்­கின்­றது. பிற்­கா­லத்தில் அஷ்ரஃப் ஐக்­கிய இலங்கை என்ற நிலைப்­பாட்­டுக்கு வந்­தி­ருந்தார் என்றும் அத­னா­லேயே நுஆ. கட்­சி­யையும் ஆரம்­பித்தார் என்றும் இவர் போன்­ற­வர்கள் கூறு­வார்­க­ளாயின், மு.கா. என்­பது பிரி­வி­னை­வாத கட்­சியா என்­ப­தற்கு விளக்­க­ம­ளிக்க வேண்டும்.

அஷ்ரஃப் மர­ணித்து 15 வரு­டங்­க­ளுக்குப் பின்னர் அமா­னுக்கு இந்த அர­சியல் அக்­கறை ஏற்­பட்­டி­ருப்­ப­தற்கு காரணம் என்­ன­வென்று தேடிப் பார்த்த போது சில சுவா­ரஸ்­ய­மான தக­வல்கள் கிடைத்­தன. அதா­வது, பஷீர் சேகு­தா­வூதின் உரை சிங்­கள மற்றும் ஆங்­கிலப் பத்­தி­ரி­கை­களில் பிர­சு­ர­மா­கி­யுள்­ளது. இச் செய்­தி­களில் தனி முஸ்லிம் மாகாணம் (separate Muslim province) என்­பது தனி நாடு (separate state) என வெளியாகி இருக்­கின்­றது. இதனைப் பார்த்த அமான் விளக்­க­மில்லா குழப்­பத்­திற்கு ஆளா­கியே கடி­த­மொன்றை எழு­தி­யி­ருக்­கின்றார் என்று உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத தகவல் ஒன்று கூறு­கின்­றது. எவ்­வா­றி­ருப்­பினும், இச் செய்தி வெளியா­கிய உட­னேயே மு.கா. உயர் மட்­டத்­தி­னரை ஊடக உய­ர­தி­கா­ரிகள் மற்றும் சர்­வ­தேச ஊட­கங்கள் தொடர்பு கொண்டு இது தொடர்­பான தமது சந்­தே­கங்­களை கேட்டு தெளிவு பெற்­றுள்­ளன. இச் செய்தி மொழி பெயர்ப்பில் தவறு ஏற்­பட்­டி­ருப்­ப­தாக காரணம் ஒன்று கூறப்­ப­டு­கின்ற போதிலும், அதில் ஏதேனும் உள்­நோக்கம் இருக்­குமோ என்ற சந்­தே­கமும் இருக்­கவே செய்­கின்­றது. 

தனி முஸ்லிம் மாகாணம் என்ற கோரிக்கை நெடுங்­கா­ல­மாக பேசப்­பட்டு வரு­கின்­றது. முஸ்லிம் காங்­கி­ரஸோ, அர­சாங்­கமோ அல்­லது தமி­ழர்­களோ, இலங்கை முஸ்­லிம்கள் தனி­நாடு கோரு­வ­தாக சித்­தி­ரிக்­க­வில்லை. அவர்­க­ளுக்கு விஷயம் விளங்­கு­கின்­றது. ஆனால், வேறு மொழி பத்­தி­ரி­கையில் வெளியான செய்தி உண்­மையா இல்­லையா என்­பதை, ஒரு தமிழ் ஊட­கத்தைப் பார்த்து உறு­திப்­ப­டுத்திக் கொள்­ளாமல் அல்­லது சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளிடம் கேட்­ட­றி­யாமல் பஷீ­ருக்கு கடிதம் எழு­தப்­பட்­டி­ருக்­கு­மாயின், அது பக்­கு­வ­ம­டையா தன்­மைக்கு மிக நெருக்­க­மா­ன­தாகும். இதை வைத்துக் கொண்டே சிங்­கள ஊட­கங்­களும் இன­வா­தி­களும் அஷ்ரஃப் தனி மாகா­ணமே கேட்­க­வில்லை என்று கூறு­வ­தற்கு தலைப்­பட்­டாலும் ஆச்­ச­ரி­யப்­பட ஒன்­று­மில்லை. 

குழம்பும் புத்­தி­சா­லிகள்

இது இவ்­வா­றி­ருக்க, இன்­னு­மொரு பெய­ர­ளவு கட்சி ஒன்றின் தலைவர் ஒரு கருத்தை வெளியிட்­டுள்ளார். அஷ்ரஃப் இன­வா­தத்தை தூண்டி அர­சியல் செய்­தது போல ஹச­ன­் அலியும் செய்ய முற்­ப­டு­கின்றார் என்­பது அவ­ரது ஆதங்­க­மாக இருக்­கின்­றது. அஷ்­ரஃபின் கோஷம் இக்­கா­லத்­திற்கு ஒவ்­வாது என்று தெரிவித்­துள்ள அவர், அவரை விட சிந்­த­னை­வா­திகள், அறி­வா­ளிகள், திற­மை­யா­ன­வர்கள் நமது சமூ­கத்தில் இருக்­கின்­றனர். அவர்­களை இனங்­காண வேண்டும் என்று குறிப்­பிட்­டுள்ளார்.

இந்த நாட்டில் சிங்­கள இன­வா­திகள் அழித்­தொ­ழிப்புச் செய்­த­போது, பள்­ளி­வா­சல்கள் பயந்து நடுங்­கிய போது அதற்­கெ­தி­ராக கிளர்ந்­தெ­ழாத சில புத்­தி­ஜீ­விகள் (?) மறைந்த தலை­வரை இன­வாத சிந்­த­னை­யு­டை­யவர் என்று சொல்­வது வினோ­த­மாக உள்­ளது. உண்­மையில், அஷ்ரஃப் வானத்தில் இருந்து இறக்­கப்­பட்­ட­வரோ, 100 வீதம் சரி­யான ஆளு­மையோ அல்ல. அவ­ரிலும் சில தவ­று­களைக் காணலாம். ஆனால், இன்று வரைக்­கு­மான உரிமை, அபி­வி­ருத்தி அர­சி­யலில் அவர் போல யாரும் ஜொலிக்­க­வில்லை என்­பதை யாரும் மறுக்க முடி­யாது. அதேபோல், அஷ்­ரஃபை விட அறி­வா­ன­வர்கள் இந்த சமூ­கத்தில் இருக்­கின்­றார்கள் என்­பதும் உண்­மையே. அவ்­வா­றா­ன­வர்கள் விட்ட தவ­றுதான் இன்று இச்­ச­மூ­கத்தை வக்­கற்ற சமூ­க­மாக ஆக்­கி­யி­ருக்­கின்­றது. முஸ்லிம் சமூ­கத்­திற்குள் இருக்­கின்ற புத்­தி­ஜீ­வி­களும், படித்­தோரும், வைத்­தி­யர்கள், சட்­டத்­த­ர­ணிகள் போன்ற தரப்­பி­னரும் தமது சமூகக் கட­மையை நிறை­வேற்­றாத கார­ணத்­தி­னா­லேயே முஸ்லிம் காங்­கிரஸ் உள்­ளிட்ட எல்லா அர­சியல் கட்­சி­களும் அர­சி­யல்­வா­தி­களும் இந்த கேடு­கெட்ட நிலைக்கு சமூ­கத்தை ஆளாக்­கி­யி­ருக்­கின்­றார்கள் என்­பதை குறிப்­பிட்­டாக வேண்டும். 

இந்த சமூ­கத்தில் இருக்­கின்ற அஷ்­ரஃபை விட சிறந்­த­வர்கள் யாரையும் யாரும் தேடிப்­பிடிக்க வேண்­டி­ய­தில்லை. ஒரு சமூக சிந்­த­னை­யாளன் அழைப்பு வரும் வரைக்கும் காத்­தி­ருக்க மாட்டான். அவ­னுக்­குள்­ளி­ருக்­கின்ற உணர்வு அவனை உந்தித் தள்ளும். ஆனால், அவ்­வா­றான உந்­து­தல்­களை நமது சமூ­கத்தில் காண முடி­ய­வில்லை. அறி­வா­ளிகள், புத்­தி­ஜீ­விகள், படித்­தோரில் பலர் சமூ­கத்­திற்கு பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­கின்ற போது நமக்கேன் பொல்­லாப்பு என்று ஒதுங்கி இருப்­ப­வர்­க­ளா­கவும் ஏட்டுச் சுரக்­காய்­க­ளா­க­வுமே இருக்­கின்­றார்கள். யார் ஏற்றுக் கொள்­ளா­விட்­டாலும் அதுதான் நிதர்­சனம். 

எது எவ்­வா­றி­ருப்­பினும் வடக்கு, கிழக்கு இணைக்­கப்­பட்டு அதில் தமி­ழர்­க­ளுக்­கான தீர்வு வழங்­கப்­படப் போகின்­றது. அவர்­க­ளுக்கு பெரும் நிலப்­ப­குதி கொடுக்­கப்­ப­டு­மாயின் முஸ்­லிம்­க­ளுக்கும் ஒரு ஆட்­புல எல்லை கிடைக்க அதிக வாய்ப்­புள்­ளது. இதில் சர்­வ­தே­சமும் அர­சாங்­கமும் மாத்­தி­ர­மன்றி தமி­ழர்­களும் மிகத் தெளிவாக இருக்­கின்­றனர். நிலத்­தொ­டர்­பற்ற முஸ்லிம் மாகாணம் உரு­வா­னால், தமி­ழர்­க­ளி­னு­டைய ஆட்­பு­லமும் நிலத்­தொ­டர்­பற்­ற­தா­கவே இருக்கும். இதை ஏற்றுக் கொள்­வ­தி­லேயே தயக்­கங்கள் இருக்­கலாம். மற்­ற­படி, முஸ்­லிம்­களின் அபி­லா­ஷை­களும் நிவர்த்­திக்­கப்­பட வேண்­டு­மென்­பதில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு இதய சுத்­தி­யுடன் இருக்­கின்­றது. 

ஆனால், மேற்­சொன்­ன­வாறு முஸ்­லிம்­களே தமக்­கி­டையில் கருத்து மோதல்­க­ளுக்கும் விளக்­க­மில்லா குழப்­பங்­க­ளுக்கும் ஆளா­கி­யி­ருக்­கின்­றனர். இன ஐக்­கி­யத்­தையும் உரிமைக் கோரிக்­கை­யையும் சிலர் போட்டுக் குழப்பிக் கொள்­கின்­றனர். தனி முஸ்லிம் மாகாண நிர்­வா­கத்தை தனித்­தி­யங்கும் ஒரு நாடாக திரி­பு­ப­டுத்திக் காட்­டு­வ­தற்­கான முயற்­சி­க­ளுக்கு இவர்­க­ளது கருத்­துக்கள் தூப­மி­டு­கின்­றன. முதலில் இக்­கோ­ரிக்­கையை கீழ்­மட்டம் தொடங்கி படித்த, மேல்­மட்டம் வரை எல்லா முஸ்­லிம்­களும் ஐய­மற விளங்கிக் கொள்ளுதல் அவ­சி­ய­மாகும். 

முன்­கதை சுருக்கம்

நிலத்­தொ­டர்­பற்ற மாகாண அலகு பற்றி மறைந்த மு.கா. தலைவர் அஷ்ரஃப் 1980களின் நடுப்­ப­கு­தியில் இருந்து மேடை­களில் பேசி­வந்தார். முஸ்லிம் சமூக சிந்­த­னை­யா­ளனும் அர­சியல் அறி­வா­ளி­யு­மான எம்.ஐ.எம்.முஹிதீன் இத­னது அவ­சி­யத்தை அக்­கா­லத்தில் கருத்­தியல் ரீதி­யாக வலி­யு­றுத்தி இருந்தார். அர­சியல் களத்தில் நேர­டி­யாக கள­மாடிக் கொண்­டி­ருந்த அஷ்ரஃப், 1988 இல் வடக்கு, கிழக்கு இணைக்­கப்­பட்ட பின்னர் இதனை மிகக் கடு­மை­யாக வலி­யு­றுத்­தினார். இருப்­பினும், அவ­ரது மரணம், முஸ்லிம் கட்­சி­களின் பிளவு, மு.கா.வின் போக்கு, வட­கி­ழக்கு மாகாணம் 2007 இல் மீள இரு மாகா­ணங்­க­ளாக பிரிக்­கப்­பட்­டமை போன்ற கார­ணங்­க­ளினால் இக் கோரிக்கை வலிமை இழந்து போனது எனலாம். புலிகள் தோற்­க­டிக்­கப்­பட்­ட­மையும் கிழக்கில் முஸ்லிம் முத­ல­மைச்சர் ஒருவர் பதவி வகிக்­கின்­ற­மையும், தனி முஸ்லிம் மாகாணம் என்ற தாகத்தை சற்றே தணித்­தி­ருந்­தன. 

எனவே, கடைசிக் காலத்தில் அஷ்ரஃப் கோரி­நின்ற முஸ்லிம் தனி­அ­லகைக் கூட அப்­ப­டியே கிடப்பில் போட்­டு­விட்டு, கரை­யோர மாவட்டம் என்ற கோரிக்­கையை ஒவ்­வொரு தேர்தல் காலத்­திலும் மு.கா. பேசு­பொ­ரு­ளாக தூக்கிப் பிடித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால், இப்­போது மீண்டும் இவ்­விரு மாகா­ணங்­களும் இணைக்­கப்­படப் போகின்­றன. இணைந்த வட­கி­ழக்கில் தமி­ழர்­க­ளுக்­கான தீர்­வுத்­திட்டம் வழங்­கப்­ப­டு­வது திண்­ண­மாகத் தெரிகின்­றது. என­வேதான், தனி முஸ்லிம் மாகாண கோரிக்கை மீள உயிர்ப்­ப­டைந்­தி­ருக்­கின்­றது எனலாம். இது தொடர்­பாக பல­த­ரப்­பட்ட கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. 

ஆனால், இரு பிர­தான முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­களும் தனி மாகாண அலகு பற்றி இந்த நிமிடம் வரைக்கும் வாய் திறக்­கவே இல்லை. ரவூப் ஹக்­கீ­முக்கு தனி மாகா­ணத்தை கோரு­வதில் பெரிதாக உடன்­பாடு இல்லை. கண்­டியில் தனக்கு வாக்­க­ளிக்­கின்ற மக்கள் தன்னை ஒரு பிரி­வி­னை­வா­தி­யாக நோக்­கு­வார்கள் என்­பது அவ­ரது உள்­மன பயம் என்­கின்­றனர் அவ­ரது கட்­சிக்­கா­ரர்கள். அதேபோல் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு கிழக்கில் ஒரு முஸ்லிம் மாகா­ணத்தை பெற்றுக் கொடுப்­பதால் பெரிய நன்­மைகள் எதுவும் இல்லை. கிழக்கில் வாழ்­கின்ற மக்­க­ளுக்கு தனி மாகா­ணத்தை பெற்றுக் கொடுத்­து­விட்டால், அவர்­க­ளது பிரச்­சினை எல்லாம் தீர்ந்­து­விட்டால் நமது பிழைப்பு என்­ன­வாகும் என்ற பயம் பொது­வாக எல்­லோ­ருக்கும் இருக்­கின்­றது. எனவே இது குறித்து கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் பொது­மக்­க­ளுமே சிந்­தித்து, அழுத்­தங்­களை பிர­யோ­கிக்க வேண்­டி­யுள்­ளது. 

சிந்­திக்க வேண்­டி­யது

முஸ்லிம் மக்கள் பின்­வரும் விட­யங்­களை சிந்­திக்­கு­மாறு வேண்­டு­கின்றேன். அதா­வது, தற்­போ­தி­ருக்­கின்ற கிழக்கு மாகாணம் என்­பது இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்த காலத்தில் இருந்த இனப்­ப­ரம்­பலைக் கொண்ட ஒரு ஆட்­புல எல்லை அல்ல. தற்­போது கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முத­ல­மைச்­ச­ராக பதவி வகித்­தாலும் இது உண்­மையில் முஸ்­லிம்­களின் மாகா­ணமும் அல்ல, முத­ல­மைச்சர் பதவி முஸ்­லிம்­க­ளுக்கு நிரந்­த­ர­மா­ன­தல்ல. ஆனாலும், வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­டாமல் இருந்தால் தனி மாகாணம் பற்றி யோசிப்­பதை சற்று தாம­தப்­ப­டுத்த முடியும். அவை இணைக்­கப்­ப­டு­கின்­ற­போது சிந்­திக்­காமல் இருப்­பது நல்­ல­தல்ல. 

உண்­மையில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை ஏன் இணைக்க வேண்டும் என்ற கேள்வி 99 வீத­மான முஸ்லிம் மக்­க­ளுக்கு இருக்­கின்­றது. இவ்­விரு மாகா­ணங்­களும் இணைக்­கப்­பட்டால் தமி­ழர்­க­ளுக்­கான தீர்­வுத்­திட்­டத்தில் உள்­ள­டக்­கப்­படும் நிலப்­ப­கு­தியின் விசாலம் அதி­க­மாக இருக்கும். இது­போன்ற பல நன்­மைகள் நமது சகோ­தர இனத்­திற்கு கிடைக்கும். அவ்­வாறே வடக்கை முதன்­மை­யாகக் கொண்ட ஒரு ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு நன்­மையோ திருப்­தியோ கிடைக்­கு­மென்றால் அது நல்­லதே. ஆனால் அதற்கு எவ்­வித உத்­த­ர­வா­தமும் இல்லை. இன்­றி­ருக்­கின்ற சம்­பந்தன் போல ஒரு நல்ல தலை­மை­யையும் முஸ்­லிம்­களை அர­வ­ணைக்­கின்ற தமிழ் அர­சி­யல்­வா­தி­களை, எதிர்­கா­லத்தில் இணைந்த வட­கி­ழக்கு கொண்­டி­ருக்­குமா என்­பது யாருக்கும் தெரியாது. அவ்­வாறு கொண்­டி­ருக்­கா­விடின், தமிழ் -–முஸ்லிம் முரண்­பாடு உரு­வாக இட­முண்டு. 

நாம் என்­றென்­றைக்கும் நேசிக்கும் சகோ­தர தமி­ழர்­க­ளுக்கு நிச்­ச­ய­மாக நல்­ல­தொரு தீர்வு கிடைக்க வேண்டும். அது அவர்­க­ளது இழப்­புக்கள் எல்­லா­வற்­றையும் ஈடு­செய்­வ­தாக இருக்க வேண்டும். அவர்கள் சிந்­திய கண்­ணீ­ருக்கும் வியர்­வைக்கும் பிர­தி­யு­ப­கா­ர­மாக அமைய வேண்டும். இந்த நிலைப்­பாட்டில் எந்த மாற்­றமும் கிடை­யாது. இதில் முரண்­ப­டு­கின்­ற­வர்கள் மனி­த­னாக வாழ்­வ­தற்கு லாயக்­கற்­ற­வர்­க­ளா­கவே கரு­தப்­பட வேண்டும். ஆனால், இங்­கி­ருக்­கின்ற பிரச்­சினை என்­ன­வென்றால், வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை இணைத்து அதில் ஒரு பகு­தியை உள்­ள­டக்­கிய தீர்­வுத்­திட்டம் ஒன்று தமி­ழர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­மாக இருந்தால், சம­கா­லத்தில் முஸ்­லிம்­களின் ஆட்­பு­லமும் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அவர்­க­ளது அபி­லா­ஷை­க­ளையும் நிறை­வேற்­று­வதன் மூலம் இத் தீர்வு, அறு­தியும் இறு­தி­யு­மான தீர்­வாக அமைக்க வேண்டும். இந்த அடிப்­ப­டை­யி­லேயே தனி முஸ்லிம் மாகாணக் கோரிக்கை முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது. தவிர, தமி­ழர்­க­ளுக்கு கொடுக்­கின்­றார்கள் என்றால் எமக்கும் தர­வேண்டும் என்ற பொறா­மையின் வெளிப்­பாடோ வீம்புத் தன­மான கோரிக்­கையோ அல்ல. 

அந்த வகையில், முஸ்லிம் மாகாண அலகு தொடர்­பாக அழுத்­தங்­களை கொடுப்­போரின் கருத்­தின்­படி, இரண்டு கருத்­திட்­டங்கள் இருக்­கின்­றன. முத­லா­வது, இணைந்த வட­கி­ழக்கு மாகா­ணத்தில் நிலத் தொடர்­பற்ற முஸ்லிம் தனி மகா­ண­மாகும். இது பொத்­துவில் தொடக்கம் திரு­கோ­ண­மலை வரையும் அதே­போன்று மன்­னா­ரிலும் உள்ள முஸ்­லிம்­களை முற்­று­மு­ழு­தாக கொண்ட உள்­ளூ­ராட்சி சபை­களை உள்­ள­டக்­கி­ய­தாகவும் இருக்கும். மன்னார், முச­லியில் வாழ்­கின்ற முஸ்­லிம்கள் சுய­மாக விரும்­பினால் மாத்­தி­ரமே இதில் இணைந்து கொள்­ளலாம். இரண்­டா­வது, தனி முஸ்லிம் அலகு ஆகும். மன்னார் மக்கள் முஸ்லிம் மாகா­ணத்­திற்குள் இணைய விருப்­ப­மில்­லாத சந்­தர்ப்­பத்தில் உரு­வாகும் ஆட்­புல எல்­லை­யா­னது முஸ்லிம் தனி அல­காக இருக்கும். இதில் எந்த வடிவ தீர்வு கிடைத்­தாலும் அது நிலத் தொடர்­பற்ற ஆட்சிப் பரப்­பா­கவே இருக்கும். அதா­வது, இந்­தி­யாவின் பாண்­டிச்சேரி நிர்­வாக மாதி­ரியை ஒத்­த­தாக இது அமையும். 

ஒரு மாகாணம் பற்­றிய வரை­ய­றைகள் இதை­வி­டவும் ஆழ அக­ல­மா­ன­தாகும். அது பற்­றிய கோரிக்கை முன்­வைக்க முன்­ன­தாக மக்­களை தெளிவு­ப­டுத்த வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது. அர­சாங்கம் தரு­கின்­றதோ இல்­லையோ, தமி­ழர்கள் விடு­கின்­றார்­களோ இல்­லையோ, ஆனால் இணைந்த வட­கி­ழக்கில் உரு­வாகும் தமிழ் மாகா­ணத்­திற்குள் எக்­கா­லத்­திலும் வாழ்­வது பிரச்­சி­னை­யில்­லையா அல்­லது முஸ்லிம் மாகாணம் அவ­சி­யமா என்ற முடி­வுக்கு வர வேண்டும். தமிழ் மாநி­லத்தில் தமிழ் சகோ­த­ரர்­க­ளுடன் எவ்­வித பிணக்­கு­மின்றி, முரண்­பா­டுகள் ஏற்­ப­டாமல் வாழ முடியும்.

இவ்­வி­ட­யத்தை தமி­ழர்கள் தவ­றாக புரிந்து கொள்ளக் கூடாது. என்­னடா நமக்கு வழங்கும் தீர்வுப் பொதியில் முஸ்­லிம்கள் பங்­கு­கேட்­கின்­றார்­களே என்று எண்­ணவும் கூடாது. இது ஒட்­டு­மொத்த கிழக்கு முஸ்­லிம்­க­ளி­னதும் வின­ய­மான வேண்­டு­கோ­ளாகும். இந்த நாட்டில் தமி­ழர்­களின் இனப் பிரச்­சி­னையே முதன்­மு­த­லாக தீர்த்து வைக்­கப்­பட வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் இல்லை. ஆனபோதும், இனப் பிரச்சினை தீர்வு என்பது பிரச்சினைகளை கொண்டுள்ள எல்லா இனங்களுக்குமான தீர்வாகவே அமைய வேண்டும். இல்லாவிடின் இன்றில்லாவிட்டால் என்றாவது ஒருநாள், பிட்டும் தேங்காய்ப் பூவும் போல் இரண்டறக் கலந்து வாழ்கின்ற சமூகங்கள் நிர்வாக, அதிகார, ஆட்புல, உரிமைசார் வேற்றுமைகளை சந்திக்க நேரிடும். இது பிரளயமாக வெடிக்கும் அபாயத்தை தவிர்க்க வேண்டுமாயின் முஸ்லிம்களது நியாயமான கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கப்பட வேண்டியது வரலாற்றின் நியதியாகும். 

தற்போதிருக்கும் மேல் மாகாணம் போன்று, இணைந்த வடகிழக்கில் உருவாகும் உத்தேச தமிழ் மாகாணம் போன்றே, முஸ்லிம் மாகாணமோ தனியலகோ அமையும். இவையிரண்டும் தனிநாடுகளாக செயற்படாது. வேறு வேறு ஜனாதிபதிகள் ஆளப் போவதில்லை. பிரிவினைவாதம் மற்றும் இன ஐக்கியம் பற்றி அதிபுத்திசாலிகள் கவலைப்பட ஒன்றுமில்லை. ஏனெனில், தமிழ், முஸ்லிம் பிராந்திய எல்லைகளுக்கு இடையில் மதில் கட்டப்பட மாட்டாது, மூவின மக்களுக்கு இடையிலும் இருக்கின்ற ஐக்கியம் பாதிக்கப்படவும் இடமில்லை. 

முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் கிடைக்கின்றதோ இல்லையோ. ஆனால், கிழக்கில் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும், படித்தவர்களும், அதிலுள்ள நியாயங்களை விளங்கிக் கொண்டு காத்திரமான கருத்துக்களை வெளியிட வேண்டும். இல்லை பரவாயில்லை இது போதுமென நினைத்து காலத்தை கடத்திவிட்டு, பிறகொருக்கால் தமிழர்களுடன் சண்டை பிடிக்கக் கூடாது. 

எல்லாம் கைமீறிப் போன பிற்பாடு, படுக்கையை நனைத்த பராயமடையாச் சிறுவன் விடிந்த பிறகு வீட்டாருக்கு விளக்கமளிப்பது போல வியாக்கியானங்கள் கூற ஆட்கள் தேவையில்லை.

எ.எல்.நிப்ராஸ் 

 (வீரகேசரி 27/02/16)

nifras