SLFP யை விட்டு முதல் முதலில் வெளியேறியது மைத்திரிபால சிறிசேனவே : மஹிந்த !

mahinda-maithri-970x623
ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றமை தொடர்பில் ஊடகங்கள் அமைதி காத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாரிய மோசடி, ஊழல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று மீண்டும் பிரசன்னமாகி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

ஊடகங்களுக்கு நேற்றைய தினம் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் என்ன எண்ணுகின்றீர்கள் என ஊடகவியலாளர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்துவதற்காக கட்சியை விட்டு தான் முதலில் வெளியேறவில்லை எனவும், முதல் முதலாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தோல்வியை தழுவ தான் காரணம் இல்லை என தெரிவித்த மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வலுப்படுத்தியது தான் எனவும் இதன் போது நினைவூட்டியுள்ளார். 

ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரத்திலுள்ள உஷ்ணம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.