இஸ்லாமியர் என்ற போர்வையில் எமது மார்க்கத்தை கொச்சைப்படுத்தும் செயல்களுக்கு இடமளிக்க போவதில்லை

அஹமதிய்யாக்கள் எனும் காதியானிகள் முஸ்லிம் என்ற பெயரில் தம்மை அடையாளப்படுத்தி அங்கீகாரம் பெற மேற்கொள்ளும் பகீரத முயற்சிகளுக்கு முஸ்லிம் சமூகம் எதிரானது என்றும் அதனை அனுமதிக்காது என்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் திட்டவட்டமாக தெரிவித்தார். 

rishad

கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனம், நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல், ஆகியவற்றுடன் இணைந்து ’’அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா’ ஏற்பாடு செய்த ’இறுதி நபித்துவத்தை பாதுகாக்கும் மாநாட்டில்’ அமைச்சர் ரிசாத் பங்கேற்று உரையற்றினார். நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அதன்  தலைவர் எம் எ எம் ரமீஸ் தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை தலைவர் ரிஸ்வி முஃப்தி, மெளலவி எம் ஆர் எப் பரூத், ஆர் ஆர் டி தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்டீன்,சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் ஆகியோரும் உரையாற்றினர். மாநாட்டின் இறுதியில் நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் செயலாளர் இஸ்மதுர்ரஹ்மான் நன்றியுரை நிகழ்த்தினார்.

 

அமைச்சர் ரிசாத் இங்கு கூறியதாவது,

காதியானிகள் இஸ்லாத்துக்கு எதிராகவும், திருக்குர்ஆனுக்கு எதிராகவும் எமது இறூதி தூதர் முஹம்மது நபி ஸல் அவர்களுக்கு எதிராகவும் பரப்பி வரும் அபாணடமான பொய்களையும் கட்டுக்கதைகளையும் நாம் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.

அவர்கள் இஸ்லாமியர் என்ற போர்வையில் எமது மார்க்கத்தை கொச்சைப் படுத்தும் செயல்களுக்கு இடமளிக்க போவதில்லை. முஸ்லிம்கள் என இவர்கள் தங்களை அடையாளப்படுத்த பெருமளவான பணத்தை அள்ளி இறைத்து வருகின்றனர்,

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு இவர்களின் சுயரூபங்களை தெளிவு படுத்துவோம். முர்தத்தான (மார்க்கத்தை விட்டு போனவர்கள்) இந்த காதியானிகள் தாங்கள் இஸ்லாத்துக்கெதிராக மேற்கொண்ட காரியங்களுக்கு இறைவனிடம் நேரடியாக மன்னிப்புக்கேட்டு திருந்திக்கொள்ள வேண்டும். இன்றேல் ஜம்மிய்யாவுடன் இணைந்து இவர்களின் சவால்களை முறியடிக்க தயாராவோம் என்று அமைச்சர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல, சாந்தியும் சமாதானமும் எஙகள் வழி. பெருமானாரின் போதனைப்படி வாழ்கின்றவர்கள் நாங்கள். இஸ்லாமிய இளைஞர்கள்  அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களிலும் முக நூல்களிலும் ஆர்வங்காட்டி தேவையற்ற விடயங்களில் நுழைவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

 

இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜம்மியதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி கூறியதாவது,

ஜனாதிபதியோ, பிரதமரோ, இந்த அரசாங்கமோ முஸ்லிம் என்ற அடையாளத்திற்குள் காதியானிகளை அங்கீகரித்து எந்த காரியங்களையும் செய்யக்கூடாது என்றார். 

 

இந்த மாநாட்டில் ஆர் ஆர் டி இயக்கத்தின் அனுசரணையுடன் வெளியிடப்பட்ட ’அஹமதி காதியானிகள் ஏன் முஸ்லிம்கள் அல்லர்’என்ற நூலை ஆர் ஆர் டியின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்டீன் வெளியிட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கது