மகேஸ்வரன் கொலை : எம்மீது பொய்யான குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன !

மகேஸ்வரன் கொலை தொடர்பில் அவரது ஐந்து சகோதரர்களையும் அழைத்து விசாரணை செய்தால் உண்மை வெளிவரும் என தெரிவித்த ஈ.பி.டி.பி. தலைவரும் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா இக் கொலை தொடர்பில் விசேட விசாரணைகள் குழுவொன்று ஏற்படுத்தப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டுமென்றும் அவர் இன்று பாராளுமன்றத்தில் வேண்டுகோளை முன்வைத்தார். 

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுகள் தொடர்பான  குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே டக்ளஸ் தேவானந்தா எம்.பி. இவ் வேண்டுகோளை முன்வைத்தார். 

duglas dewanantha

சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் கொலை தொடர்பாக இச் சபையில் சில விடயங்கள் வெளியிடப்படுகின்றன. பாராளுமன்றத்தையும், மக்களையும் திசை திருப்பும் விதத்தில் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

அரசியல் ரீதியான நடவடிக்கைகளுக்காக எம்மீது பொய்யான குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.

இக் கொலை தொடர்பாக நீதிமன்றமும் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.

இதில் ஏதும் சந்தேகம் இருக்குமானால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும். அதனை விடுத்து பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதில் பிரயோசனமில்லை.