ஐ எஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதல் குறித்து ஜெர்மனிய நாடாளுமன்றத்தில் விவாதம்!

இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொண்டு சிரியாவிலிருந்து செயல்படும் அமைப்பினர் மீது, வான் தாக்குதல்கள் நடத்தப்படுவதை ஆதரிப்பது குறித்து ஜெர்மனிய நாடாளுமன்றத்தில் விவாதங்களை தொடங்கியுள்ளன.

கடந்த மாதம் பாரிஸில் நடைபெற்றத் தாக்குதல்களில் 130 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, ஐ எஸ் அமைப்பின் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவு தேவை என பிரான்ஸ் கோரியதை அடுத்து, இந்த விவாதம் ஜெர்மனியில் நடைபெறுகிறது.

இந்த விஷயத்துக்கு ஜெர்மனிய நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் அளிக்குமாயின், ஜெர்மனி ஐ எஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதல்களுக்கு இராணுவ உபகரணங்களும், 1200 படை வீரர்களையும் வழங்கும்.

எனினும் நேரடியான மோதலில் ஜெர்மனி ஈடுபடாது. தமது துருப்புக்களை அங்கு அனுப்ப ஜெர்மனி விரும்பவில்லை என்பதும், ஐ எஸ் மீதான தாக்குதல்கள் குறித்து அந்நாட்டுக்கு கவலைகள் உள்ளன எனவும் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் அமைச்சர்களோ ஜெர்மனி இப்போது ஐ எஸ் அமைப்பால் தாக்குதலுக்கு உள்ளகக் கூடும் என்று நம்புகின்றனர்.