கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு முஸ்லிம் காங்கிரசின் வீட்டுச்சொத்தா?

  

சுலைமான் றாபி

ஒரு நாட்டின் மிகப்பெரும் அத்தியாவசியத்தேவைகளில் கல்விக்கு அடுத்த படியாக சுகாதாரம் மிகப்பெரும் பங்கினை வகிக்கின்றது. இதனாலேயே ஒவ்வொரு நாட்டிலும் வாழும் மக்களிடத்தில் இவை இரண்டும் மிக அத்தியாவசிய தேவைகளாக மாறிவிட்டது. இது இவ்வாறு இருக்க நமது நாட்டில் சுகாதார சேவை நாளுக்கு நாள் பல வளர்ச்சிப்படிகளை எட்டிக்கொண்டு வந்தாலும் கிழக்கு மாகாணத்தின் சுகாதார அமைச்சு அதிகார மோகத்தினால் சுருட்டப்பட்டு எங்கோ ஒரு மூலையில் தூசு படிந்து கிடக்கிறது. உண்மையில் இந்த விடயமானது படித்தவன் முதல் சாதாரண பாமரன் வரை அனைத்து சமூகத்தினராலும் நன்கு உற்று நோக்கப்படுகின்ற மிகப்பெரும் விடயமாக அவதானிக்கப்படுகிறது. 

இதில் இம்முறை இடம்பெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்காக முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்கள் தனது பதவியினை இராஜினாமா செய்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகியும் கூட அதிகார மோகம் கொண்டு இந்த அமைச்சு  கிடைத்தால் தனக்குத்தான் கிடைக்க வேண்டும் இல்லாவிட்டால் அது யாரின் கைக்கும் செல்லக் கூடாது என்பதில் இறுமாப்புக் கொள்கையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் குறுகிய மன சிந்தனைகள் இன்னமும் மங்காமல் இருக்கின்றது மனவேதனையளிக்கின்றது. 

இந்த விடயத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களும் ஏதோ நாதியற்றுக் காணப்படுவதனையும் அவதானிக்க முடிந்துள்ளது. ஏனென்றால் தேர்தலுக்குப் பிறகு இந்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு யாரின் கைகளுக்குச்செல்ல வேண்டும், அதன் மூலம் இம்மாகாண மக்களின் பிரச்சினைகள் எவ்வாறு  தீர்க்கப்பட வேண்டும் போன்ற விடயங்களில் அக்கறையில்லாது வெறும் அரசியல் அறிக்கைகளை விட்டு கிழக்கு மாகாணம் ஏதோ ஆசியாவின் ஆச்சரியம் போன்று அவரால் சித்தரிக்கப்படுகிறது.

உண்மையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் இந்த சுகாதார அமைச்சரை நியமிக்கும் விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் போன்றோர்களிடத்தில் இது சம்பந்தமான எந்தவிதமான முன்னேற்பாட்டு  நடவடிக்கைகளையும் எடுத்ததாக அறியக் கிடைக்கவில்லை. 

இதுதவிர இந்த சுகாதார அமைச்சர் ஒருவர் இதுவரைக்கும் நியமிக்கப்படாததால் வைத்தியசாலைகளிலும், இன்னும் சுகாதார அமைச்சு சம்பந்தமான ஏனைய திணைக்களங்களில் காணப்படும் குறைகளை நிபர்த்தி செய்யமுடியாமல் அங்கு கடமை புரியும் ஊழியர்களும், அதன் நிர்வாகங்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். உண்மையில் இது கிழக்கு மாகாண முதல்வரின் நிர்வாக கட்டமைப்பிற்குக்  கிடைத்த மிகப்பெரும் சவாலும் இழுக்குமாக உற்று நோக்கப்படுகின்றது.   

இது தவிர சுகாதார அமைச்சரை நியமிக்கும் விடயத்தில் அதன் முதல்வர் ஏன் கரிசனையற்றுக் காணப்படுகின்றார் என கேட்கத்தோணுகிறது. மறு புறம் கிழக்கு மாகாண சபையில் நாளுக்கு நாள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆழும் கட்சிக்கு தாவுவதினால் அங்கு பலமான ஒரு எதிர்க்கட்சி இல்லாத சூழ்நிலை காணப்பட்டாலும் இந்த சுகாதார அமைச்சர் விடயத்திலும் இன்னமும் ஒருத்தரும் குறி வைக்க முடியாமல் திண்டாடுகின்றார்கள் என்பதனை மட்டும் நன்றாக அவதானிக்க முடிந்துள்ளது. 

உண்மையில் இது நிச்சயம் வேதனைப்படவேண்டிய ஒரு விடயமாக இருக்கின்றது. ஏன்? அவ்வாறெனில் இந்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு முஸ்லிம் காங்கிரசிற்கு மட்டும் சொந்தமானதா? அல்லது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர்தானா சுகாதார அமைச்சராக வர வேண்டும்? இது என்ன அக்கட்சியின் வீட்டுச்சொத்தா? என பல்வேறு கேள்விக் கணைகளை தொடுக்க வேண்டியுள்ளது.

இது தவிர மாகாண சபை அமர்வுகளில் மட்டும் வீராப்புப் பேசும் ஏனைய சபை உறுப்பினர்களும் இந்த அமைச்சு பற்றி தட்டிக் கேட்க திராணியற்றவர்களாக இருக்கின்றார்களா? எனவே இவர்கள் எல்லோரும்  வெறும் ஊடக அரசியல் நடாத்தும் அரசியல்வாதிகளாகவே மக்களால் புடம் போடப்பட்டுள்ளனர்.  

இது இவ்வாறு இருக்க கிழக்கு மாகாண சுகாதார அமைச்சை யாருக்கு எப்படி எந்த சந்தர்ப்பத்தில் கொடுக்க வேண்டும் என்று மு.கா தலைவர் மனக்கணக்குப் போட்டு வைத்துள்ளார். ஆனால் அவர் கடைசி நேரத்திலே துரும்புச்சீட்டை இறக்குவார். அது வரைக்கும் முட்டுபவர்கள் முட்டி மோதி, சின்னா பின்னப்பட்டு அவர்களை சீரழிய வைத்து விட்டு பிறகு அவர்களின் வாய்களுக்கு தீனி போடும் பழக்கத்தை தந்துரோபாயமாக கொண்டுள்ள மு.கா தலைவரும் இந்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு விடயத்தை பற்றி கவனம் செலுத்தாமையும் பல்வேறு தாக்கங்களை நாளுக்கு நாள் ஏற்படுத்துகிறது. 

ஏனென்றால் அன்றாடம் இந்த சுகாதார அமைச்சு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நஸீரிற்கா, தவத்திற்கா, உதுமாலெவ்வைக்காஅல்லது திருகோணமலையைச் சேர்ந்த ஒருவரிற்கா என்ற கேள்விகள் நாளுக்கு நாள் மக்களிடத்தில் விரிசலாகிப் போவதை இங்கு மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. இது  மு.கா தலைவர்  வழமையாக மேற்கொள்ளும் ஒருவகை “நரித்தந்திர” அரசியல் என்றும் குறிப்பிடலாம். இது போன்ற ஒரு முறைதான் அண்மையில் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயம்… 

சரி இது இவ்வாறு இருந்தாலும் இன்னமும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரை நியமிக்க முடியாமைக்கான காரணம் என்ன? எனவே இவ்வாறான பதவி மோகங்கள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை வாட்டிக் கொண்டே போனால் அவர்களின் ஆதரவாளர்களிடத்திலும், அவர்களிடத்திலும் பனிப்போர்கள் உக்கிரம் அடைந்து பிளவுகளை சந்திக்க வேண்டிய தருணம் ஏற்படும். பின்னர் பதவிகளுக்காக பிரிந்து செல்லும் சமூகங்களாக நம்மளை நாம் உருவாக்க வேண்டிய நிலைமைகள் ஏற்படும்.  

இது இவ்வாறு இருக்க அண்மைக்காலமாக முன்னாள் அமைச்சர் அதாஉல்லா முஸ்லிம் காங்கிரசில் இணையப்போகின்றார் என்கின்ற கதைகள் வேகமாகப் பரவினாலும் அவரை கட்சிக்குள் கடைசி வரை சேர்க்கக் கூடாது என்பதில் அநேக போராளிகள் அவதானமாக இருக்கின்றார்கள். ஏனென்றால் அதாஉல்லாஹ் கட்சிக்குள் வந்தால் தங்களின் கதை கந்தலாகிவிடும் என்பதில் அவர்கள் ஒவ்வொருத்தரும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள். 

ஆனால் மு.கா தலைவர் அவர்கள் எப்படியான முடிவுகளை எடுப்பார் என்பது யாருக்கும் தெரியாத ஒரு விடயமாக இருக்கின்றது. ஏனென்றால் கடந்த காலங்களில் மு.காவையும், அதன் தலைமையையும் விமர்சித்து தனிக்கட்சி அமைத்து திரிந்த தற்போதய கிழக்கு முதலமைச்சரையே வளைத்துப்போட்ட மு.கா தலைவரிற்கு அதாஉல்லாஹ்வை வளைத்துப்  போடுவதென்பது ஒரு பெரிய காரியமல்ல. 

ஏனென்றால் அமைச்சர் அதாஉல்லாவினால்தான் முஸ்லிம் காங்கிரஸ் பாரிய வளர்ச்சியடைந்தது என்று சொன்னால் மிகையில்லை. இந்த  விடயத்தில் புதிதாக  அரசியல் பேசுபவர்கள் சற்று நிதானமாக அறிக்கைகளை விடுவது காலத்தின் தேவையாகும். அதே போன்றுதான் தேசியப்பட்டியல் விடயமும். எனவே இவையெல்லாம் எதிர்கால அரசியல் காய் நகர்த்தல்களாக இருந்தாலும் தற்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டியது அவசியமானதாகும். 

எனவே கிழக்குமாகாண சுகாதார அமைச்சரை பெறும் விடயத்தில் அரசாங்கத்தோடு இணைந்துள்ள அனைத்து கட்சிகளும் விரைவாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.