நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பெற்றுள்ள மிகப்பெரும் மக்கள் ஆணையை சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் வரவேற்கின்றது!

 

பி.எம்.எம்.ஏ.காதர்
கல்முனைத் தொகுதியில் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களும் பெற்றுள்ள மிகப்பெரும் மக்கள் ஆணையை சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் வரவேற்பதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

2-SRF-300x212

நடந்து முடிந்த தேர்தலில் வெற்றியீட்டி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள எச்.எம்.எம்.ஹரீசுக்கு வாழ்த்துத் தெரிவித்து சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் எம்.ஐ.ஏ.ஜப்பார், பொதுச் செயலாளர் கலீல் எஸ்.முஹம்மட் ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது

‘கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கல்முனைத் தொகுதியில் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாரிய வெற்றியை ஈட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக தங்களது வெற்றியானது கல்முனை மண் உங்களுக்கு வழங்கியுள்ள அதிஉயர் மக்கள் ஆணையாகவே பார்க்கப்படுகிறது.

உங்களது இந்த பெரு வெற்றிக்காகவும் மக்கள் ஆணையை மீண்டுமொரு முறை நிரூபித்து சாதனை படைத்தமைக்காகவும் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் தங்களுக்கு வாழ்த்துத்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

தேர்தலுக்குப் பின்னர் 2015-08-30 ஆம் திகதி இடம்பெற்ற எமது மறுமலர்ச்சி மன்றத்தின் முதலாவது குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இந்த வாழ்த்துச் செய்தி தங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேவேளை இந்த மக்கள் ஆணையானது சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால அபிலாசையாக இருந்து வருகின்ற தனியான உள்ளூராட்சி மன்ற கோரிக்கைக்கு ஒட்டுமொத்த கல்முனை மக்களும் வழங்கிய அங்கீகாரமாகவே நாம் இதனை கருதுகின்றோம்.

ஏனெனில் சாய்ந்தமருது பிரதேசத்தில் மட்டுமல்லாமல் கல்முனைத் தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை நீங்கள் பகிரங்கமாக பிரஸ்தாபித்து வந்தீர்கள். இதனை மக்கள் ஏற்று அங்கீகரித்து, இந்த ஆணையை உங்களிடம் அமானிதமாக வழங்கியுள்ளார்கள்.

அத்துடன் சாய்ந்தமருது மக்கள் கோரி நிற்கின்ற உள்ளூராட்சி மன்றமானது தேர்தல் முடிந்த கையேடு நிறைவு செய்யப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் அளித்த பகிரங்க வாக்குறுதி இன்று ஒட்டுமொத்த கல்முனைத் தொகுதி மக்களாலும் ஏற்று கொள்ளபட்டுள்ளது.

இந்த வாக்குறுதிகளின் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினராகிய நீங்களே இருந்துள்ளீர்கள் என்பதையிட்டு நாம் பெருமிதம் கொள்கிறோம்.

அதேவேளை கல்முனை பிராந்தியத்தின் பாரிய நகர அபீவிருத்திக்கு என்றுமே இல்லாதவாறு பொறுப்பு வாய்ந்த அதிகாரம் உங்களுக்கு கிடைக்கவும் அதன் மூலம் கல்முனை மிகவும் பொலிவு பெறும் ஒரு வசந்த காலமாக தங்களது பதவிக் காலம் அமைவதற்கும் நாம் பிரார்த்திக்கின்றோம்.

ஆகையினால் இந்த சந்தர்பத்தில் சாய்ந்தமருது மக்களின் நீண்டகால தேவையாக இருந்து வருகின்ற உள்ளூராட்சி மன்றத்தினை மிக விரைவில் பிரகடனப்படுத்த நீங்கள் அதிகபட்ச ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்க முன்வர வேண்டும் என இந்த ஊர் மக்கள் சார்பில் எமது மறுமலர்ச்சி மன்றம் தங்களை மிகவும் தயவாய் வேண்டிக் கொள்கிறது’ என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.