தமிழர்கள் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும் -முதலமைச்சர்

முதலமைச்சர் ஊடகப்பிரிவு 

இன்று நாட்டில் நல்லாட்சி உருவாகியிருக்கிறது. இந்த நல்லாட்சினை உருவாக்க இலங்கையின் சிறுபான்மையினமான நாங்கள் பெரும்பங்காற்றியிருக்கிறோம். ஆனால் அதற்கான இலாபத்தை, அதற்கான பிரயோசனத்தை நமது மக்கள் இன்னும் அடையவில்லை. எனவே இந்நல்லாட்சியில் நாம் பலனடைந்து நமது மக்கள், நமது பிரதேசம், நமது மாவட்டம் அங்குள்ள மக்கள் எல்லாம் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றால் நாமனைவரும் ஒன்று படவேண்டும்.

எனவே இன்று இலங்கையில் ஒற்றுமையை சீர்குலைக்க பணம்  பரிமாறப்படுகிறது. அப்பணத்தைப் பெற்றுக்கொண்டு தான் மட்டும் சொகுசுவாழ்க்கை வாழனும் மற்றவர்கள் எவ்வாறு நாசமாகப்போனாலும் பறவாயில்லை என்ற எண்ணத்தில் நாட்டையும் , வீட்டையும் ஏன் தன் சமூகத்தையும் சீரளிக்க முன்வந்துள்ளவர்களின் முகத்திரைகளை கிளித்தெறிய வேண்டுமென்றால் தமிழ் மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும், முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரசுக்கும் வாக்களிக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்:
நாட்டின் நல்லாட்சியின் பங்காளர்களான நாம் நம் நாட்டின் சமாதானம், சுபீட்சம் என்றும் தளைத்தோங்க மேலும் பாடுபடவேண்டும், நாட்டில் இனவாதம், மதவாதம், என்ற கேவலமான சிந்தனையை முறியடித்து நாம் இலங்கையர் என்ற கூற்றில் ஒன்று பட்டு செயற்பட வேண்டும். அப்போதுதான் எமது இலக்கு நமது மக்களின் சந்தோஷம், மக்களின் அபிலாசைகளை சரியாக நிறைவேற்றிக்கொடுக்க முடியும் என்று குறிப்பிட்டார்.
கடந்த முப்பது வருடங்களாக நாம் நாட்டில் நமது மக்களுக்கு சரியான சந்தோஷம், தூக்கம், உணவு, இருப்பிடம், ஏன் எம் மக்களுக்கு நின்மதியான கல்வி ஆகியவற்றை வழங்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தோம். அந்நிலை இன்று இல்லாது நாம் சந்தோஷமாக இருந்து கொண்டிருக்கிறோம். எனவே நம்மை நாம் சீர்படுத்தி இந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் இவ்வாட்சியை மேலும் வலுவூட்டி பிரச்சனையல்லாத, ஒரு நாடாக இந்நாட்டை கொண்டு செல்ல நமது வாக்குகளை சரியாகப்பயன்படுத்த வேண்டும். நாமளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் மிகவும் பெறுமதி வாய்ந்த வாக்குகளாகும். நமது வாக்குகள் மூலம் நாம் தெரிவு செய்யும் ஒவ்வொரு உறுப்பினர்களும் நமது குரலாக மிளிர வேண்டுமே தவிர அவர்களின் சொகுசு வாழ்கைக்காக பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்தார்.
தமிழ் மக்கள் இன்று ஒற்றுமையுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கீழ் ஒன்று பட்டிருப்பது போன்று இன்று முஸ்லிம்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கீழ் ஒன்று பட்டு சிறப்பாக செயல்படவேண்டும். அப்போதுதான் நமது கோரிக்கைகள், நமது தேவைகளை சரியான நேரத்தில், சரியான முறையில் பெற்றுக்கொள்ள முடியும். எனவே இலங்கை திருநாட்டில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும், முஸ்லிம் மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் வாக்களிக்க நம் முயற்சிகளை மேற்கொண்டு அவர்களுக்கான அறிவுறுத்தல்களை சரியாக வழங்குவோம். நாட்டில் சமாதானம் , சகோதரத்துவம், சமத்துவம், என்றும் மேலோங்க நாம் அனைவரும் முன்னின்று செயற்படுவோம் என்றும் தனதுரையில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கேட்டுக்கொண்டார்.