கலகத்தை விளைவித்து அதன் ஊடாக எம் மீது அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சி : மஹிந்த

அரசாங்கம், குண்டர்களைக் கொண்டு கூட்டு எதிர்க்கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.கொழும்பு நகரிற்கு வரும் மக்கள் சக்தி போராட்டத்தை குழப்பி அதன் மூலம் கூட்டு எதிர்க்கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது.

ஏதேனும் கலகத்தை விளைவித்து அதன் ஊடாக இவ்வாறு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு அரசாங்கமும் பொலிஸாரும் முயற்சிக்கின்றனர்.குண்டர்களைக் கொண்டு குழப்பம் விளைவிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் நோக்கில் மக்கள் சக்தி போராட்டம் நடத்தப்படுகின்றது. இந்தப் போராட்டம் நடத்தப்பட முன்னதாகவே அரசாங்கம் பெரும் பீதியடைந்துள்ளது.எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.