இந்தியாவை மேம்படுத்த என்ன விலை கொடுக்கவும் தயார் : பிரதமர் மோடி

இந்தியாவை மேம்படுத்த என்ன விலை கொடுக்கவும் தயார் என பிரதமர் மோடி கூறினார்.

டெல்லியில் பிரபல ஆங்கில பத்திரிகையின் தலைமைத்துவ மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


மேம்பட்ட இந்தியாவை உருவாக்குவதற்கு நான் எடுத்த நடவடிக்கைகளுக்காக, நான் தேர்ந்தெடுத்த பாதைக்காக அரசியல் ரீதியாக ஒரு விலை கொடுக்க வேண்டியது இருக்கிறது. இதை நான் அறிந்துள்ளேன். இதற்கு நான் என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.

உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது நாட்டின் நடத்தையிலேயே ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது.

சுதந்திரத்துக்கு பின்னர் முதல்முறையாக, நாட்டில் சட்ட விரோதமாக பணத்தை குவித்த ஊழல்வாதிகள் பயம் அடைந்துள்ளனர்.

எல்லா பண பரிமாற்றங்களும் தொழில் நுட்ப ரீதியில், டிஜிட்டல் முறையில் நடக்கிற நாள் வருகிறபோது, பெரிய அளவில் திட்டமிட்ட ஊழல்கள் தடுக்கப்பட்டு விடும்.

கருப்பு பணம், வங்கிகளுக்கு வந்துள்ளது. அது மிகப்பெரிய புள்ளி விவரங்களை புதையலாக கொண்டு வந்திருக்கிறது. இது தவறான புள்ளிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு வழி வகுத்துள்ளது. சட்டத்துக்கு புறம்பான வழிகளில் திரட்டப்பட்ட சொத்துகள், இணை பொருளாதாரத்துக்கு நிதி அளித்தது. இப்போது அது முறைசார் பொருளாதாரத்துக்கு மாறி உள்ளது.

நாட்டு நலனை முன்னிட்டு அமைப்பு ரீதியில் நிரந்தரமான மாற்றங்களை கொண்டு வருவதற்காக இந்த அரசால் எடுக்கப்படுகிற நடவடிக்கைகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இந்த நாட்டை ஒரு மந்திரக்கோலால் மாற்றி விட முடியாது என்று யார் கருதுகிறார்களோ, அவர்கள் ஏமாற்றத்தால் முணுமுணுப்பவர்கள்தான். சரக்கு, சேவை வரியைப் பொறுத்தமட்டில் அது வெளிப்படையான புதிய அத்தியாயத்தை உருவாக்கி உள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, முந்தைய ஆட்சியாளர்கள் எதை விட்டுச்சென்றிருக்கிறார்கள்? நாட்டின் பொருளாதாரம், ஆட்சி நிர்வாகம், நிதி நிலைமை, வங்கி முறை என அனைத்துமே மோசமான வடிவில் இருந்தன. ஊழல் என்பது நெறிமுறையாக இருந்தது.

ஆனால் ஊழலில் இருந்து நாட்டை விடுவிக்க எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது.

ஆதார் அடையாள அட்டை, புற வழியில் சென்ற நிதிக்கசிவுகளை தடுத்து நிறுத்தி உள்ளது. மேலும், பினாமி சொத்துகளை கண்டுபிடிப்பதற்கான கருவியாக செயல்படும்.

கடந்த 70 ஆண்டுகளாக நிர்வாக முறைக்கு எதிராக மக்கள் போராடி வந்தனர். இந்த நிர்வாக முறை வளர்ச்சிக்கு தடையாக அமைந்தது. எனது முயற்சி, உறுதி எல்லாமே மக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதுதான். அவர்களின் வாழ்வும் உயர வேண்டும்.

சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். அரசு எல்.இ.டி. பல்பு முறையை அமல்படுத்தியதால் ரூ.14 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த 50 ஆண்டுகளுக்கு நடுத்தர வருவாய் பிரிவு மக்களின் ஓட்டு வங்கியை நான் பெற வேண்டும்.

ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் 2¼ லட்சம் கம்பெனிகளின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவற்றின் இயக்குனர்கள், எந்தவொரு கம்பெனியிலும் இயக்குனராக அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.