சிறைசெல்லவும் தயார் மறியல் போராட்டத்திலிருந்து ஒரு அடியேனும் பின்வைக்கமாட்டோம்,

 

-எம்.வை.அமீர்-

மறியல் போராட்டத்திலிருந்து ஒரு அடியேனும் பின்வைக்கமாட்டோம். நாங்கள் நியாயத்துக்காக போராடுகிறோம். எங்களது போராட்டத்தை தடை செய்யாதீர்கள் வேண்டுமானால் எங்களை கைதுசெய்து சிறையில் அடையுங்கள் என்று சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா அம்பாறை பிராந்திய எஸ்.எஸ்.பி. யிடம் தெரிவித்தார்.

உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் முன்னெடுக்கும் போராட்டத்தின் இரண்டாம் நாளான 2017-10-31 ஆம் திகதி பாரிய வீதிமறியல் போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. குறித்த மறியல் போராட்டத்தை ஒதுங்கி நின்று முன்னெடுத்து போக்குவரத்துக்கு வளிவிடுமாறு எஸ்.எஸ்.பி. கூறியபோதே தலைவர் கைது செய்யுங்கள் என்று உருக்கமாக தெரிவித்தார்.

தங்களது கோரிக்கை இன்று நேற்று முன்வைக்கப்பட்ட ஒன்றல்ல என்று தெரிவித்த அவர், இது யாருக்கும் எதிரானது அல்ல என்றும் நியாயங்களை பெற பொலிசாரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தீர்வு கிடைக்கும்வரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று தெரிவித்த அவர், எதிர்காலத்தில் மேலும் வலுப்பெறும் என்றும் தெரிவித்தார்.