முன்னாள் அமைச்சர் அஸ்வர் காலமானார்

முன்னாள் அமைச்சர் அஸ்வர் காலமானார்

முன்னாள் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் இன்று இரவு 7.15 மணியளவில் தனியார் வைத்தியசாலையில் காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது 80.

4 பிள்ளைகளின் தந்தையான இவர், லங்கா சமசமாஜக் கட்சி மூலம் அரசியலுக்குப் பிரவேசித்து பின்பு ஐ.தே.க மூலம் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும், முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சர் மற்றும் பாராளுமன்ற விவகார இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகித்ததோடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராகவும் பணிபுரிந்தார்.

ஆசிரியராக மட்டுமல்லாது மஹரம தினகரன் பத்திரிகை செய்தியாளராக தனது பொது வாழ்வை ஆரம்பித்த இவர், கலாநிதி ரீ.பி. ஜாயா, டாக்டர் எம். சீ. எம். கலீல், எம். எச் . முஹம்மத், எம். ஏ. பாக்கிர் மாக்கார் உட்பட பல முஸ்லிம் தலைவர்களோடு நெருங்கி செயற்பட்டார்.

ஜனாஸா நாளை மாலை தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.

தெஹிவளை, பாத்தியாமாவத்தை, இலக்கம் 04 என்ற முகவரியிலுள்ள அவரது வீட்டிலிருந்து ஜனாஸா நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.