சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம் சலீம் ஆற்றிவரும் ஊடக சேவைக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது

 

 

பி.எம்.எம்.ஏ.காதர்

தனது வாழ்நாளை ஊடகத்துறைக்காக அர்ப்பணித்த இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களுள் ஒருவரும்,சிரேஷ்ட ஊடகவியலாளருமான நிந்தவூரைச் சேர்ந்த கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம், முழு நேர ஊடகவியலாளராக ஐம்பது வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளமையை கௌரவித்து,அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம்’ வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி பாராட்டி கௌரவிக்கவுள்ளது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் 2017-07-09ஆம் திகதி நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு நிந்தவூர் பிரதேசசபை மண்டபத்தில் இந்த விழா நடைபெறவுள்ளது.இந்த விழாவில் சலீம் பற்றிய தகவல்களோடு ஊடகத்துறை மற்றும் அரசில் துறை சார்ந்தவர்களின்; வாழ்த்துச் செய்திகளுடன்;  ‘பொன் விழா காணும் ஏ.எல்.எம்.சலீம்’ என்ற பெயரில் 150 பக்கங்களைக் கொண்ட நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.

மேலும்; ஊடவியலாளர் சலீம் அவர்களின் ஊடக சேவைக்காக அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட தங்கப்பதக்கம் அணிவித்து வாழ்த்துப் பேழை,சான்றிதழ்,பரிசுப் பொதி என்பன வழங்கி பொன்னாடைகள் போர்த்தி கௌரவிக்கப்படவுள்ளார்.இந்த விழாவில் முக்கிய தமிழ், முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள்,கல்விமான்கள்,இலக்கியவாதிகள்,ஊர்களின் பிரமுகர்கள் உள்ளீட்ட பொது மக்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

நிந்தவூரைச் சேர்ந்த ஆதம்லெப்பை ஆமினா உம்மா தம்பதியின்; மூன்றாவது புதல்வனாக 1949-09-14ஆம் திகதி நிந்தவூரில் பிறந்தவர்தான் முகம்மது சலீம் நிந்தவூர் ஜுனியர் பாடசாலையில்(தற்போது அல்-அஷ்ரக்; தேசியபாடசாலை)கல்வி கற்றார்.அப்போதே கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான சலீம் பாடசாலைக் காலத்தில் மாணவர் மன்றம், கலைநிகழ்வுகள் போன்றனவற்றின் போது சிறுகதை, நாடகம், கவிதை என்பனவற்றை இயற்றி, அரங்கேற்றி பலரது பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டவர்

 

கலை இலக்கிய எழுத்துத் துறையில் ஆர்வம் கொண்டு செயற்பட்டு வந்த சலீம் அவர்களின் மூத்த சகோதரரும், ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளருமான நிந்தவூரின் மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.அமீன் அவர்களின் வழிகாட்டுதலுடன் 1966ஆம்; ஆண்டு காலப்பகுதியில் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக மிளிரும் ஊடகத்துறையில் காலடி பதித்தார்.இலங்கையின் தமிழ் ஊடகத்துறையின் ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் அமரர் எஸ்.ரீ.சிவநாயகம் போன்ற முன்னணி ஊடகவியலாளர்களால் புடம் போடப்பட்டவர்.

 

பயங்கரவாத காலகட்டத்தில் பல ஊடகவியலாளர்கள் ஒதுங்கியிருந்த கால கட்டத்தில் தனது உயிரையும் துச்சமென நினைத்து இன மத வேறுபாடின்றி உண்மையின் பக்கம் நின்று தன் பணியை துணிந்து செய்த பெருமகன் சலிம். 

 

அதேபோன்று 2008ஆம்; ஆண்டு இலக்கியப் பணிக்காக இலங்கை அரசாங்கத்தின் கலாச்சார அமைச்சினால் வழங்கப்படும் உயர்விருதான ‘கலாபூசணம்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.ஊடகத்துறைக்காக இவர் ஆற்றிய சேவையை மதித்து கிழக்கு மாகாண முதலமைச்சராக சிவனேசத்துரை சந்திரகாந்தன் பணியாற்றிய காலப்பகுதியில், மாகாண மட்டத்தில் வழங்கப்படும் உயர்விருதான ‘முதலமைச்சர்விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

 

மருதமுனை மண்ணில் 1966 ஆம் ஆண்டு ஜுலை 02ஆம்; திகதி கொண்டாடப்பட்ட முதலாவது இஸ்லாமிய் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டின் 50வது வருட நிறைவினை வரலாற்றில் பதிக்கும் பொன் விழா நிகழ்வில் ,வாழ்நாளில் 50 வருடங்களை ஊடகத்துறைக்காக அர்ப்பணித்து தடம்பதித்த்.சலீம் அவர்களின் ஊடகப் பணியை வாழ்த்திப், பாராட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான கௌரவரவூப் ஹக்கீம் அவர்களினால் பொன் விழா விருது வழங்கி கௌரவித்தமை இவரது 50 வருடசேவைக்கு கிடைத்தபெரும் பேறாகும்.

 

நீதி, நேர்மை, நியாயம், மனிதத்; தன்மை, நடுநிலை, அர்ப்பணிப்பு என்பனவற்றை தனது அணிகலன்களாக கொண்டு ஊடக உலகில் வலம் வரும் சலீம் அவர்களுக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனமும்,அதன் தலைவர் கலாபூசணம் மீரா எஸ், இஸ்ஸதீன் அவர்களினதும்,உறுப்பினர்களதும் அயராத முயற்சியின் பலனாக சலீம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பது வரலாறாகும்.
இந்த சாதனை வீரர் ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் இன்னும் நீண்ட ஆயுளோடு பல ஆண்டுகள் வாழ்ந்து ஊடகத்துறைக்கு பெருமை சேர்க்க இறைவனைப் பிரார்த்திற்போம்.