டொனால்ட் டிரம்ப் – விளாடிமிர் புதின் முதன்முறையாக சந்திப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் முதல்முறையாக நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். 

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் தொடங்கியுள்ள ஜி 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டில் அவர்கள் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிகொண்டனர். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது என்ற குற்றச்சாட்டின் மூலம் பாதிப்படைந்துள்ள தொடர்புகளை சரிசெய்ய விரும்புவதாக அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த உச்சி மாநாடு நடைபெறும் இடத்திற்கு வெளியே போராட்டங்கள் நடைபெற்று வருகையில், இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் பருவநிலை மாற்றமும், வர்த்தகம் பற்றியும் அதிகமாக விவாதிக்கப்படுகின்றன. 

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெறும் போராட்டங்களால் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலானியா டிரம்பால் ஹோட்டல் அறையைவிட்டு வெளியேவர முடியவில்லை. 

 

டிரம்பும், புதினும் பங்கேற்பது, பருவநிலை மாற்றம், உலகளாவிய செல்வ சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராக போராடும் ஆப்பாட்டக்காரர்களை உச்சி மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து அப்புறப்படுத்த காவல்துறையினர் முயன்று வருகின்றனர். இதற்கு அவர்கள் தண்ணீரை அடித்து மக்களை கலைத்துள்ளனர். 

காவல்துறை மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களாலும், சிலர் எறிகுண்டுகளை வீசியதாலும், இரு தரப்பிலும் ஏராளமானோர்  காயமடைந்துள்ளனர். 

20 நாடுகள் குழு என்பது வளர்ந்த, வளர்முக நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என 19 நாடுகளின் ஒரு உச்சி மாநாடாகும். 

இந்த உச்சி மாநாட்டின் துவக்கத்தில் ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்கல் பேசுகையில், “உலகளாவிய சவால்களை நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம். நமக்கு நேரம் குறைவாகவே இருக்கிறது. மிகவும் பின்னோக்கி செல்லாமல், சமரசத்திற்கும், ஒன்றாக சேர்ந்து பணியாற்றுவதற்கும் நாம் தயாராக இருந்தால்தான் தீர்வுகளை காண முடியும். ஆனால், ஒரே பிரச்சைனையில் வேறுபட்ட பார்வைகளை நாம் நிச்சயம் வெளிப்படுத்த முடியும்” என்று பேசியுள்ளார். 

டிரம்ப்-புதின் பேச்சுவார்த்தை

ஜெர்மனி அரசின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள குறுகிய காணொளியில் டிரம்பும், புதினும் கைகுலுக்கிக் கொள்கின்றனர். பிற தலைவர்களின் மத்தியில் அவர்கள் இருவரும் சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகையில், டிரம்ப், புதினின் கையில் தட்டுவதும் பதிவாகியுள்ளது. இருவரும் தற்போது இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். 

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுவார்களா என்பது தெளிவாக தெரியவில்லை. 

இந்த உச்சி மாநாட்டிற்கு முன்னர் முக்கிய சர்வதேச பிரச்சனைகளில் இந்த இரு தலைவர்களும் எதிரெதிர் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

Tnx-BBC