கொரிய தீப கற்பத்தில் போர்ப் பதட்டம்..

ஐ.நா.வின் உத்தரவு மற்றும் பொருளாதார தடையை எதிர்த்து வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இது அமெரிக்காவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரியா மீது தீவிர நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறார். தற்போது தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்க ராணுவம் கூட்டாக பயிற்சி மேற்கொள்கிறது.

அதற்காக ‘யு.எஸ்.எஸ். மிசிகன்’ என்ற ஏவுகணை நீர்மூழ்கி கப்பலை தென் கொரியவுக்கு அனுப்பியுள்ளது. தற்போது அது அங்குள்ள பூசன் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

இவை தவிர அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலும் தென் கொரியாவுக்கு வந்து கொண்டிருக்கிறது. அக்கப்பல் அடுத்த வாரம் நீர் மூழ்கி கப்பலுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுகிறது.

இதற்கிடையே வட கொரியாவின் 85-வது ராணுவ தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அப்போது அந்த நாடு 6-வது அணுஆயுத சோதனை அல்லது நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகளை சோதனை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் காலையில் அது போன்று எதுவும் நடைபெறவில்லை. ஆனால் மாலையில் ஆயுதங்களை வெடிக்க செய்து வட கொரியா தனது ராணுவ தினத்தை கோலாகலமாக கொண்டாடியது. இது அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு சவால் விடுவது போலவும், ஆயுத கண்காட்சி நடத்தியது போன்றும் இருந்தது.

இதற்கிடையே வட கொரியாவின் மிரட்டலை சமாளிக்க அமெரிக்கா, ஐப்பான் -தென் கொரியா ஆகிய நாடுகள் டோக்கியோவில் கூடி ஆலோசனை நடத்த உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் கொரிய தீப கற்பத்தில் போர் பதட்டம் நிலவுகிறது.