வர்த்தமானியானது அகதியாய் வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதி – மஹிந்த

 நாம் வடக்கு முஸ்லிம்களுக்கு சாதாரணமாக பெற்றுக்கொடுத்தவற்றை தக்க வைத்துக்கொள்ள,அவர்கள்  போராட்டம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

நேற்று பேருவளை பிரதேசத்தில் முஸ்லிம்களை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ,அவர்களிடம் வில்பத்து வனத்தை விஸ்தரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாம் இலங்கையில் 30 வருட காலமாக  நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவுடன்,அங்கு இன மத வேறு பாடுகளின்றி,நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு மீள் குடியேற்றங்களை மேற்கொண்டோம்.அந்த வகையில் நாட்டின் இறையான்மைக்கு குந்தகம் விளைவிக்காத யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களையும் மீள் குடியேற்றம் செய்தோம்.

என்னுடைய ஆட்சிக் காலத்தில் தற்போது போன்று பாரிய ஆர்பாட்டங்களை செய்து மீள் குடியேற்றுங்கள் என முஸ்லிம்கள் கேட்க வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை.அன்று எம்மோடு இருந்த அமைச்சர் றிஷாதை முன்னிறுத்தி இந்த மீள் குடியேற்றங்களை செய்திருந்தோம்.விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதை எமது கடமையாகவும் கருதி இருந்தோம்.

என்னுடைய ஆட்சிக் காலத்திலும் பல இனவாத அமைப்புக்கள் என்னிடம் இது தொடர்பில் பல தடவைகள் சுட்டிக் காட்டி இருந்தன.பல ஆர்ப்பாட்டங்களையும் மேட்கொண்டிருந்தனர்.அச் சந்தர்ப்பங்களில் அவர்களின் சொற்களை சிறிதும்  காதுக்கும் எடுக்காதிருந்தேன்.ஆட்சியை கைப்பற்றிய ஓரிரு வருடங்களுக்குள் இனவாத அமைப்புக்களுக்கு அஞ்சிய இவ்வரசு வில்பத்துவுக்கு வடக்கே உள்ள முஸ்லிம்களின் காணிகளை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வனமாக அறிவிக்கவுள்ளது.இந்த இனவாத அமைப்புக்களின் அழுத்தம் எத்தகையது? அவர்களுக்கு இவ்வரசு எவ்வாறு அடிபணிந்துள்ளது என்பதையெல்லாம் இதனூடாக முஸ்லிம்கள் அறிந்து கொள்வதோடு என்னுடைய காலத்தில் நிலவிய இனவாதத்தின் பின்னால் நான் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.இதுவும் எனது செயலே என இவ்வரசின் ஆட்சியாளர்கள் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இவ்வாறான செயல்களின் பின்னால் உள் நாட்டில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டு சக்திகளின் அழுத்தம் இருப்பதாகவே கருத வேண்டி உள்ளது.இவற்றை எவருக்கும் அஞ்சாமல் முகம் கொடுக்கும் ஆற்றல் எம்மிடமே உள்ளது.

இவ் வர்த்தமானியானது அகதியாய் பல வருடங்களாக இன்னல் வாழ்க்கையை வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியாகும்.இந்த ஆட்சியின் முக்கிய பங்காளர்களான முஸ்லிம்களை இவ்வரசு அமைந்த சில வருடங்களுக்குள்ளே கை கழுவி விட்டது.நாம் முஸ்லிம்களுக்கு சாதாரணமாக பெற்றுக்கொடுத்தவற்றை தக்க வைத்துக்கொள்ள,அவர்கள்  போராட்டம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.இதன் மூலம் முஸ்லிம்களின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் யார் என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்ளலாம்.