பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த 2000 கிலோ கட்டாக் கருவாடு புறக்கோட்டையில் பறிமுதல்

ஊடகப்பிரிவு

பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு விற்பனை செய்யும் நோக்கில் புறக்கோட்டையில் பாரிய குளிரூட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த 2000 கிலோ கட்டாக் கருவாட்டினை நுகர்வோர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் இன்று கைப்பற்றியதோடு அந்த விற்பனை நிலையத்தினையும் சீல் வைத்து மூடினர்.

வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்தக் கருவாடு ரூபா 20 இலட்சத்திற்கு மேற்பட்ட பெறுமதியானதென நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர். 

பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த இந்தக் கருவாட்டினை பண்டிகைக் காலத்தில் துண்டு துண்டாக வெட்டி பொதி செய்து விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வியாபாரி ஏப்ரல் 4 ஆம் திகதி மாளிகாகந்தை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை பண்டிகைக் காலத்தில் பொருட்களுக்கு எந்தத் தட்டுப்பாடும் ஏற்படாத வகையில் நுகர்வோரின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நியாயமான விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யுமாறும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதிகாரசபைக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் ஹஸித திலகரத்ன தெரிவித்தார்.