எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளையொட்டி மத்திய அரசு சிறப்பு நாணயம், தபால் தலை வெளியிட வேண்டும்: மோடிக்கு பன்னீர்..

 

தமிழக முன்னாள் முதல்வர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளையொட்டி மத்திய அரசு சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் மாபெரும் தலைவராக குடிகொண்டிருக்கும் அமரர் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாள் வரும் 17-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி மத்திய அரசின் சார்பில் சிறப்பு நாணயம், சிறப்பு தபால் தலை ஆகியவற்றை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்பதை தமிழக அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பாரத ரத்னா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவாக வெளியிடப்படும் சிறப்பு நினைவு நாணயம், தபால் தலை போன்றவை தமிழகத்தில் உள்ள அனைத்துதரப்பு மக்களின் வரவேற்பை பெறுவதுடன், உலகம் முழுவதும் வாழும் மக்களாலும் வரவேற்கப்படும்.

எனவே, சிறப்பு நிகழ்வாக கருதி இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.