இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல் , இறுதிப் போட்டிக்கு செல்லப்போவது யார் ?

gayle-kohli-m_Fotor

 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் 2-வது அரைஇறுதியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று (வியாழக்கிழமை) மோதுகின்றன.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் இரண்டாவது அரைஇறுதியில் குரூப் 1-ல் முதலிடத்தை பிடித்த வெஸ்ட் இண்டீசும், குரூப் 2-வில் 2-வது இடத்தை பெற்ற இந்தியாவும் கோதாவில் இறங்குகின்றன.

2007-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 47 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. பிறகு எழுச்சி கண்ட இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரைஇறுதியை எட்டி இருக்கிறது.

இந்திய அணி அரைஇறுதிக்கு வந்திருக்கிறது என்றால் அதற்கு முழுமுதற் காரணம் துணை கேப்டன் விராட் கோலி தான். அணியின் ஆணிவேராக விளங்கும் அவர் நெருக்கடியான சூழலில் பாகிஸ்தானுக்கு எதிராக 55 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 82 ரன்களும் விளாசி அணியை வெற்றிகரமாக கரை சேர்த்தார்.

இதுவரை 184 ரன்கள் சேர்த்துள்ள ‘நம்பர் ஒன்’ பேட்ஸ்மேனான கோலியை தவிர்த்து இந்திய அணியில் வேறு யாரும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது கவலைக்குரிய அம்சமாகும். இந்த ஆட்டத்திலும் இந்திய அணி கோலியின் பங்களிப்பைத்தான் பெரிதும் சார்ந்து இருக்கிறது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (4 ஆட்டத்தில் 45 ரன்), ஷிகர் தவான் (43 ரன்) ஆகியோரின் பேட்டிங் தொடர்ந்து சொதப்பலாக இருக்கிறது. சூப்பர்-10 சுற்றில் ‘பவர்-பிளை’யான முதல் 6 ஓவர்களில் இந்திய அணியின் சராசரி 5.66 ரன் மட்டுமே. அதாவது ஒரு பந்துக்கு ஒரு ரன் வீதம் கூட எடுக்கப்படவில்லை. சூப்பர்-10 சுற்றில் மோசமான ரன்விகிதம் கொண்ட அணி இந்தியா தான்.

முக்கியமான இந்த ஆட்டத்திலாவது இருவரும் பொறுப்பை உணர்ந்து, தேவைக்கு ஏற்ப ஆட வேண்டும். இதே நெருக்கடியில் சுரேஷ் ரெய்னாவும் (4 ஆட்டத்தில் 41 ரன்) தவிக்கிறார். அவரும் முழு திறமையை காட்ட வேண்டியது அவசியம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் இடது கணுக்காலில் காயமடைந்தார். காயத்துடன் அரைமணி நேரம் போராடிய யுவராஜ்சிங், எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது அணிக்கு சற்று பின்னடைவாகும். அவருக்கு பதிலாக மனிஷ் பாண்டே சேர்க்கப்பட்டு இருப்பதாக நேற்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

மாற்றமின்றி களம் இறங்கிய இந்திய அணி, யுவராஜ்சிங்கின் காயத்தால் முதல் முறையாக அரைஇறுதியில் மாற்றம் செய்ய வேண்டியதாகி விட்டது. அணியில் பாண்டே சேர்க்கப்பட்டாலும் அனேகமாக அனுபவ வீரர் ரஹானேவுக்கு தான் களம் காண வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. ஒரு வேளை ஆல்-ரவுண்டர் தேவை என்று உணர்ந்தால் பவான் நெகி இடம் பெறலாம்.

2012-ம் ஆண்டு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் சூப்பர்-10 சுற்றில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளை பதம் பார்த்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சம்பிரதாய மோதலில் வெஸ்ட் இண்டீஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. என்றாலும் அந்த அணி துவண்டு போய் விடவில்லை. தசைப்பிடிப்பால் அவதிப்படும் பிளட்சருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் லென்டில் சிமோன்ஸ் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி சூரர்களுக்கு பஞ்சம் கிடையாது. ‘சிக்சர் மன்னன்’ கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ், டேரன் சேமி, வெய்ன் பிராவோ, ஆந்த்ரே ரஸ்செல் அதிரடியில் வெளுத்து கட்டக்கூடியவர்கள். குறிப்பாக கெய்ல், சற்று நேரம் நிலைத்து நின்று விட்டாலும் ருத்ரதாண்டவமாடி விடுவார். இங்கிலாந்துக்கு எதிராக இதே மைதானத்தில் கெய்ல் 11 சிக்சருடன் 100 ரன்கள் குவித்தார். எனவே அவரை சீக்கிரம் வெளியேற்றினால் தான் வெஸ்ட் இண்டீசை கட்டுப்படுத்த முடியும். இன்னும் 2 சிக்சர் அடித்தால், 20 ஓவர் கிரிக்கெட்டில் 100 சிக்சர் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை கெய்ல் படைத்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெய்லுக்கு, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை துருப்பு சீட்டாக பயன்படுத்த இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. எல்லா வகையான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியையும் அலசினால், கெய்ல், அஸ்வினின் பந்து வீச்சில் 4 முறை (9 இன்னிங்சில்) ஆட்டம் இழந்திருக்கிறார். அஸ்வினின் ஓவர்களில் 70 பந்துகளை சந்தித்து 57 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். அதனால் கெய்லின் ஆதிக்கத்தை அஸ்வினின் சுழல் அடக்குமா? என்ற ஆவல் எழுந்துள்ளது.

மும்பை வான்கடே மைதானம் ‘ரன்மழை’க்கு பெயர் பெற்றது. முந்தைய ஆட்டங்களுடன் ஒப்பிடும்போது இந்த மோதலுக்கு பயன்படுத்தப் படும் ஆடுகளத்தின் தன்மை கொஞ்சம் வேகம் குறைந்து இருக்கலாம். ஆனாலும் பேட்ஸ்மேன்களின் ஜாலமே மேலோங்கி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த உலக கோப்பையில் இங்கு நடந்த ஆட்டங்களில் (230-8, 229-4, 209-5, 183-4, 182-6, 172 ரன்) பேட்ஸ்மேன்கள் ரன்வேட்டையில், பந்து வீச்சாளர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள். அதே மாதிரியான எதிர்பார்ப்பே இப்போதும் நிலவுகிறது.

இரு அணிகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியான சம பலத்துடன் இருப்பதால் களத்தில் எந்த அணி நெருக்கடியை திறம்பட கையாள்கிறதோ அவர்களின் கையே ஓங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரே அணியில் கைகோர்த்த கெய்ல்-கோலி, டோனி- பிராவோ இன்று களத்தில், நேருக்கு நேர் ஆக்ரோஷமாக யுத்தம் நடத்த ஆயத்தமாகி வருவதால் போட்டியில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது. 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி அரைஇறுதியில் (2007-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவையும், 2014-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவையும் வென்றது) தோற்றதில்லை. அந்த பெருமையை தக்க வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரஹானே அல்லது மனிஷ் பாண்டே அல்லது நெகி, டோனி (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், நெஹரா, பும்ரா.

வெஸ்ட் இண்டீஸ்: ஜான்சன் சார்லஸ், கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ், லென்டில் சிமோன்ஸ், வெய்ன் பிராவோ, ராம்டின், டேரன் சமி (கேப்டன்), ஆந்த்ரே ரஸ்செல், பிராத்வெய்ட், பத்ரீ, சுலிமான் பென்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.