முன்னணி வீரர்கள் காயம் அடைந்திருப்பது இலங்கை அணிக்கு இழப்பு: சண்டிமால் பேட்டி!

chandimal

 

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டி கொண்ட டி20 தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடர் குறித்து அந்த அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமால் பேட்டியளித்தார்.

அப்போது சண்டிமால் கூறுகையில், ‘‘நேற்றைய வலைப்பயிற்சியின்போது இடது கை வேகப்பந்து வீச்சாளர் பினுரா பெர்னாண்டோவின் தொடைப்பகுதியில் ஏற்பட்டது. இதனால் அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். தில்ஷன் ஏற்கனவே கைவிரல் முறிந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நாளைய போட்டியில் விளையாடமாட்டார். ஆனால், 2-வது மற்றும் 3-வது போட்டியில் இடம்பெறுவார். நான்கு முதல் ஐந்து முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்படுகிறார்கள்.

இதனால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. உள்ளூர் அளவிலான போட்டிகளில் அவர்கள் சிறப்பாக விளையாடியவர்கள். ஆசியக்கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பைக்கு முந்தைய இந்த தொடரில் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். நாங்கள் தற்போதைய சாம்பியனாக இருக்கிறோம். ஆனால், சங்ககரா, ஜெயவர்தனே அணியில் இல்லாதது எங்களுக்கு பெரிய இழப்பு. எல்லா அணிகளிலும் ஏற்ற இறக்கம் இருக்கும். இந்தியாவிற்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாட ஆவலுடன் காத்திருக்கிறோம்’’ என்றார்.

அந்த அணியின் கேப்டன் மலிங்கா மற்றும் ஆல் ரவுண்டர் மேத்யூஸ் ஆகியோர் ஏற்கனவே காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளனர்.