“ஒரே நாடு – பெரும் சக்தி” என்ற இலக்கை அடிப்படையாக கொண்டு 68 வது சுதந்திர தினம் !

4320818127_bc46bb9701

 

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினம் இன்றாகும். இதன் தேசிய நிகழ்வு இன்று (04) காலை கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெகு கோலாகலமாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

முப்படை, இலங்கைப் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த சுமார் 9 ஆயிரம் படை வீரர்களின் மரியாதை அணிவகுப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதியினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதன் பின்னர் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இம்முறை தேசிய கீதத்தை பாடுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.

இலங்கையின் 68வது சுதந்திர தின தேசிய விழாவானது “ஒரே நாடு – பெரும் சக்தி” என்ற இலக்கை அடிப்படையாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இன்றைய தினம் மாலை அனைத்து இன மக்களினதும் அடையாளங்களை மேம்படுத்தும் வகையில் கொழும்பு காலி முகத்திடலில் “சுதந்திர இதயத்துடிப்பு” எனும் கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

காலை நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவுக்கு சமமாக நடத்தப்படவுள்ள மாலை நிகழ்வில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

சுதந்திர தினம் மற்றும் தேசிய நிகழ்விற்கு ஆசி வேண்டி இன்று காலை சமகாலத்தில் சகல மதஸ்தலங்களிலும் விசேட பூசை, ஆராதனைகள் நடத்தப்படவுள்ளன. 68வது சுதந்திரதின மரியாதை அணிவகுப்பில் 03 ஆயிரத்து 986 இராணுவ வீரர்கள் 02 ஆயிரத்து 102 கடற்படை வீரர்கள், ஆயிரத்து 238 விமானப்படை வீரர்கள், 927 பொலிஸார் மற்றும் 664 சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்பர்.

தேசிய சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் கருஜயசூரிய, பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் மேல் மாகாண ஆளுநர் கே.சீ. லோகேஷ்வரன், மேல் மாகாண முதலமைச்சர் ஈ.ஏ.ஜ.டீ.டீ. பெரேரா உள்ளநாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொள்வர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் நடத்தப்படவுள்ள சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு காலி முகத்திடல் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதிதிகள் மற்றும் நிகழ்வினை பார்வையிட வருவோரின் வசதி கருதி மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் சில வீதிகளில் குறுகிய நேரத்திற்கு போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ். சேனநாயக்கவின் உருவச்சிலைக்கு காலை 7.30 மணிக்கு மலர்மாலை அணிவிப்பதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகும்.

காலை 8 மணி முதல் அதிதிகள் காலி முகத்திடல் நோக்கி வர இருப்பதனால் நிகழ்வுக்காக அழைக்கப்பட்டோர் மற்றும் பார்வையிட வரும் பொதுமக்கள் பாதுகாப்பு கெடுபிடிகளை தவிர்க்கும் வகையில் காலை 8 மணிக்கு முதல் காலி முகத்திடலை வந்தடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அதிதிகள் மற்றும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளோர்க்கு காலி முகத்திடல் சுற்றுவட்டாரத்திற்கூடாகவும் ஏனைய பொது மக்கள் லேக்ஹவுஸ் சுற்றுவட்டாரத்திற்கூடாகவும் காலி முகத்திடலை சென்றடைவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாகன தரிப்பிடங்களுக்கு விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை 6.30 மணிக்கு சமகாலத்தில் கொழும்பு பொல்வத்தை தர்மகீர்த்தியாராமை விகாரை, கொழும்பு 13, ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் கோயில், மருதானை ஜும்ஆப் பள்ளிவாசல். பொரளை அனைத்துப் புனிதர்களின் தேவாலய வுல்பண்டல் மாவத்தை கிறிஸ்தவ மெதடிஸ்த தேவாலயம் ஆகியவற்றில் பூசை வழிபாடுகள் நடைபெறும்.

தேசிய நிகழ்வில் காலை 8 மணிக்கு அழைக்கப்பட்ட அதிதிகள் ஆசனங்களில் அமரச் செய்யப்படுவர்.

காலை 8.33 மணிக்கு மேல் மாகாண முதலமைச்சர் அவரது பாரியாருடனும், காலை 8.35 மணிக்கு மேல் மாகாண ஆளுநர், பாரியார் சகிதமும் வருகைதருவர்.

அதனைத் தொடர்ந்து காலை 8.36 மணிக்கு உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் நிமல் லான்சா பாரியார் சகிதம் காலை 8.37 மணிக்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன பாரியார் சகிதமும் காலை 8.39 மணிக்கு பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன், பாரியார் சகிதமும், காலை 8.40 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய பாரியார் சகிதமும் நிகழ்வுக்கு வருகை தருவர்.

முற்பகல் 8.41 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாரியார், 8.45 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது பாரியாரும் வருகைதருவர்.

இன்று காலை 8.50 மணிக்கு மங்கள மேள முழக்கத்திற்கும் சங்கொலிக்கும் மத்தியில் ஜனாதிபதி தேசியக்கொடியை ஏற்றி வைப்பார். அதனைத் தொடர்ந்து நிகழ்வில் பங்கெடுக்கும் 100 பாடசாலை மாணவிகள் தேசிய கீதம் பாடுவர். காலை 9 மணிக்கு ஜயமங்கள கீதம் பாடப்படும்.

காலை 9.11 மணிக்கு ஜனாதிபதிக்கான 21 மரியாதைப் பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதும் காலை 9.15 மணிக்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்காக உரை நிகழ்த்துவார். அதனையடுத்து காலை 9.45 மணியளவில் படைவீரர்களின் மரியாதை அணிவகுப்பு நடைபெறும்.

காலை 11.30 மணிமுதல் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் காலிமுகத்திடலிலிருந்து புறப்பட்டுச் செல்வர். நண்பகல் 12 மணிக்கு இலங்கை கடற்படையினர் தேசத்திற்காக தீர்க்கப்படும் 25 மரியாதை பீரங்கி வேட்டுக்களுடன் காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய நிகழ்வு நிறைவுபெறும்.

லக்ஷ்மி பரசுராமன்