சதொச கூட்டுறவு வர்த்தக நிலையத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு !

sathosa_adz1

சதொச கூட்டுறவு வர்த்தக நிலையத்தில் இன்று அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கபடுகின்றது .

இதனால் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

சதொச கூட்டுறவு வர்த்தக நிலையத்தின் ஊடாக சந்தைக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களை சாதாரண விலையில் பெற்றுக்கொடுத்து, மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகக் காணப்பட்டது.

நாடு முழுவதும் 305 சதொச கூட்டுறவு வர்த்தக நிலையங்களை ஸ்தாபித்து, சந்தையிலுள்ள ஏனைய வர்த்தக நிலையங்களை விடவும் குறைந்த விலையில் பொருட்களை விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

சதொச நிறுவனத்தில் பொருட்களை கொண்டுசெல்வதற்காக கடந்தகாலங்களில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் இன்று தலைமையக வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தமையைக் காணமுடிந்தது.

இலங்கை சதொச நிறுவனத்தை நடத்திச்செல்ல முடியா நிலை காணப்படுவதாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியூதின் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

சதொச நிறுவனம் 10 பில்லியன் ரூபாவை வங்கியொன்றுக்கும், 03 பில்லியனை விநியோகஸ்தருக்கும் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.