‘நாடாளுமன்றத்தை விரைவில் கலைக்க ஜனாதிபதி உறுதி’ – மனோ

downloadவிரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும் சிறுபான்மை மக்களுக்கு பாதகமான எதையும் தேர்தல் திருத்தம் என்ற பெயரில் செய்ய இடந்தர மாட்டேன் என்ற எனது உறுதிமொழியை நான் நிச்சயம் காப்பாற்றுவேன் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கூறியதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி.இராதாகிருஷ்ணன் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மனோ கணேசன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, எமது சந்திப்பின் போது பல்வேறு விடயங்களை நாம் கலந்துரையாடினோம். ஜனாதிபதி எம்மிடம் கூறிய விடயங்களில் ஊடகங்களுக்கு கூறக்கூடிய  பின்வரும் விடயங்களை என்னால் கூறமுடியும்.

நாடாளுமன்ற கலைப்பு

பிரதமர், 24ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என கூறியிருக்கலாம். இந்த நாடாளுமன்றம் இனியும் தொடர முடியாது. இது கலைக்கப்பட வேண்டும்.  அதற்கான முடிவை நான் எடுத்து விட்டேன். திட்டவட்டமான திகதியை நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை. இன்னமும் சில தினங்களில் திகதி தீர்மானிக்கப்படும். எனினும் எவரும் எதிர்பாரா விரைவில் திடீரென நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்பதை உங்களுக்கு கூறிவைக்க விரும்புகிறேன். 

20ம் திருத்தம்

20ம் திருத்தம் வர்த்தமானி பிரகடனத்துடன் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும். இன்றைய  20ஆம் திருத்த சட்டமூலத்தில் எவ்வித உள்ளடக்கம் இருந்தாலும், அவற்றில் அவசியமானவை குழுநிலை விவாதத்தின் போது கொண்டுவரப்படும் புதிய திருத்தங்களை உள்வாங்குவதன் மூலம் மேலும் திருத்தி அமைக்கப்படும். 

இதன்மூலம் நான் உங்களுக்கு ஏற்கனவே வழங்கியுள்ள,  சிறுபான்மை மக்களுக்கு பாதகமான எதையும் தேர்தல் திருத்தம் என்ற பெயரில் செய்ய இடந்தர மாட்டேன் என்ற எனது உறுதிமொழியை நான் நிச்சயம் காப்பாற்றுவேன். 

சிறுபான்மை மக்களுக்கு தொகுதி நிர்ணயம் தொடர்பில் அநீதி ஏற்பட்டு விடக்கூடாது  என்ற காரணத்தினாலேயே நான் மொத்த உறுப்பினர் தொகையை 255 ஆக ஆரம்பத்திலேயே அறிவித்து இருந்தேன் என்பதையும் நான் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன் என ஜனாதிபதி தம்மிடம் கூறியதாக மனோ, தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.