தொகுதி வாரி கலப்பு தேர்தல் முறையில் முஸ்லிங்களுக்கு கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் – கி.மா.சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்

01
lankafrontnews.com

 

எம்.ஐ.எம்.றியாஸ்

 யார் விரும்பினாலும், விரும்பாது விட்டாலும் இன்று நாட்டில் தொகுதி ரீதியிலான கலப்பு முறைத் தேர்தல் பற்றிய கருத்தாடல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அது சாத்தியமாகாது விட்டாலும், அதற்கு அடுத்து வருகின்ற தேர்தல்கள், அம்முறையிலேயே நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் இன்று தென்படுகின்றன. எனவே, முஸ்லிம் காங்கிரஸ் தனக்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை அப்புதிய தேர்தல் முறையில் முஸ்லிம்களுக்கு நியாயமாகக் கிடைக்கக் கூடிய உறுப்புரிமையைகளை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளின் பக்கம் தனது கவனத்தைச் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

 பாலமுனையில் இடம்பெற்ற விளையாட்டு மைதான கேட்போர் கூட அடிக்கல் நடுகை விழாவின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சில் தலைமையில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு இங்கு தெரிவித்தார்.

இன்று இலங்கையில் உள்ள எல்லா கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் தடுமாற்றமான அல்லது குழப்பகரமான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு இருக்கின்றன. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் மட்டும் அவை எதிலும் மாட்டிக் கொள்ளாமல் மிகவும் நிதானத்துடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் கூட்டமைப்பும் அப்படி தானே இருக்கிறது என்று சிலர் கேட்கலாம். ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களுக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவியை தாருங்கள் என்று கேட்டதினூடாக தமிழ் கூட்டமைப்பும் இவ்வாறான தடுமாற்றமான அல்லது குழப்பகரமான சூழ்நிலையில் தன்னையும் ஆட்படுத்திக் கொண்டுள்ளதை நாம் எல்லோரும் அறிய முடியும்.

ஒருபுறம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தாங்கள் அனுபவித்த மக்கள் விரோத அதிகாரத்தை மீண்டும் பெற முயற்சிக்கின்றனர். அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாத அதன் உறுப்பினர்கள் ஜனாதிபதியை தர்மசங்கடத்தில் மாட்டிவிட்டு, அவரை சூழ்நிலைக் கைதியாக்கி தாம் நினைத்ததை சாதித்துக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை பிரதமராக்க வேண்டுமென்று ஒரு குழப்பநிலையை உருவாக்கி கட்சியை இரண்டாகப்  பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர்.

அதேநேரம், ஐக்கிய தேசிய கட்சி பொறுத்தவரை காலம் செல்ல செல்ல மக்கள் மத்தியில் தனக்கிருக்கும் இன்றைய பிரபல்யமும் மக்கள் செல்வாக்கும் குறைந்து சென்று, தனக்கு இன்று கிடைத்திருக்கும் ஆட்சியும் அதிகாரமும் மீண்டும் கைமாறிவிடும் சூழல் உண்டாகி விடுமென்று அஞ்சி, பத்தொன்பதாவது சரத்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மறுகணமே பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமெனவும், அதனூடாக தாம் அதிகாரத்தைப் பெறமுடியும் என்பதற்காகவும் நாள்தோறும் வெவ்வேறு பரப்புரைகளை செய்துவருகிறது.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சி அதிகமான ஆசனங்களை பெறவேண்டுமாயின் சுதந்திரக் கட்சியில் பிளவு ஏற்பட்டு எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இரு அணிகளாக களமிறங்க வேண்டுமென்பதற்காக, சில அரசியல் சித்து விளையாட்டுகளை ஐக்கிய தேசியக் கட்சி செய்து வருவதாக, அண்மையில் அமைச்சர் ராஜித சேனரத்ன பகிரங்கமான  குற்றச்சாட்டை முன்வைத்ததை நாம் எல்லோரும் அறிவோம்.

அவ்வாறுதான் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதற்காக இப்போது தமிழ்க் கூட்டமைப்பும் தனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருக்கிறது. நியாயமாகப் பார்க்கப்போனால் பதினேழு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் தமிழ்க் கூட்டமைப்புக்குத்தான் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். ஆனாலும் அவ்வாறு வழங்கப்பட மாட்டாது, ஏனெனில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டுத் தீர்மானம், வடமாகாணம் தமிழ்க் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் இருப்பது என்பதையெல்லாம் வைத்து மீண்டும் தமிழர்களின் கோரிக்கைகளை வலுப்படுத்த, எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்த்து பலம் கொடுத்துவிடும் என்ற காரணத்தால், எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற பதவியை தமிழ்க் கூட்டமைப்புக்கு வழங்குவதற்கு சிங்கள தேசிய வாதம் ஒருநாளுமே இடமளியாது.

இப்படி, எல்லாக் கட்சிகளும் ஏதோவொரு கவனக்கலைப்பில் மாட்டிக்கொண்டு இருக்கின்ற போதும் முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம், இவற்றிலிருந்தும் தப்பித்துக் கொண்டிருக்கின்ற தனது நேரத்தை, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் இன்று நம்மிடம் இருக்கின்ற கேள்வியாகும். யார் விரும்பினாலும், விரும்பாது விட்டாலும் இன்று நாட்டில் தொகுதி ரீதியிலான கலப்பு முறைத் தேர்தல் பற்றிய கருத்தாடல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அது சாத்தியமாகாது விட்டாலும், அதற்கு அடுத்து வருகின்ற தேர்தல்கள், அம்முறையிலேயே நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் இன்று தென்படுகின்றன. எனவே, முஸ்லிம் காங்கிரஸ் தனக்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை அப்புதிய தேர்தல் முறையில் முஸ்லிம்களுக்கு நியாயமாகக் கிடைக்கக் கூடிய உறுப்புரிமையைகளை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளின் பக்கம் தனது கவனத்தைச் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

குறிப்பாக முஸ்லிம்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளான புத்தளம், வன்னி, கண்டி, குருநாகல, கொழும்பு போன்ற இடங்களில் முஸ்லிம் பிரதிநித்துவங்களை எப்படி உறுதிப்படுத்தலாம் என்பதற்கான வியூகங்களையும் முன்மொழிவுகளையும் தயார்படுத்த வேண்டும். அதுமாத்திரமல்லாமல், கடந்த காலங்களில் தேர்தல் தொகுதி உருவாக்கத்தின் போது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, சம்மாந்துறை மற்றும் பொத்துவில்  போன்ற இரண்டு தொகுதிகளுக்குள் அநியாயமாக துண்டாடப்பட்டிருக்கும், சுமார் முப்பதாயிரம் வாக்குகளை கொண்டிருக்கும் அக்கரைப்பற்று போன்ற பிரதேசங்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

எனவே, முஸ்லிம் காங்கிரஸ் நான் முன்பு கூறியதைப் போன்றான கவனக் கலைப்பு விடயங்களில் மாட்டிக்கொள்ளாமல் தனக்குக் கிடைத்திருக்கும் அவகாசத்தை, ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால நலன்களுக்காக பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவோம் என மாகாண சபை உறுப்பினர் தவம் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், பிரதம அதிதி அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர்,சிறி லாங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடசியின் உயர்பீட உறுப்பினர் யூ.எம்.வாஹிட்,டாக்டர் கே.எல்.நக்பர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

02
lankafrontnews.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

03
lankafrontnews.com