செப்டெம்பர் 6ஆம் திகதிக்கு பின் ஊரடங்கு நீடிக்கப்படுமா?

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டே செப்டெம்பர் 6ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடித்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். 

இதேவேளை அதற்குப் பின்னரும் ஊரடங்குச் சட்டத்தை நீடித்து அன்றாடம் வருமானம் பெறும் தொழில்களில் ஈடுபடும் மக்களின் வயிற்றில் அடிக்கமாட்டேன் எனவும் உறுதியளித்துள்ளார். 

ஜனாதிபதி தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கோவிட் ஒழிப்பு தொடர்பான விசேட கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சர்களான பஸில் ராஜபக்‌ஷ, கெஹலிய ரம்புக்வெல, பந்துல குணவர்தன, டலஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, சிசிர ஜயகொடி, ஷன்ன ஜயசுமன, ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, பாதுகாப்புப் பணிக் குழாம் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உள்ளிட்ட அதிகாரிகள், கொரோனா ஒழிப்புச் செயலணியின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.