உடல் வெப்ப பிரச்சனையில் இருந்து விடுபட…!

எலுமிச்சை மற்றும் வெள்ளரி, தர்பூசணி இப்படி பல்வேறு இயற்கையின் கொடைகள் நம்மை வெயிலில் இருந்து பாதுகாப்பதில் முதன்மையாக விளங்குகிறது.

அதிக அளவில் மோர் அருந்துவதும் வெயிலை சமாளிக்கும் திறன் தருகிறது. வெயிலால் உடலில் ஏற்படும் நீர்இழப்பை இவை அனைத்தும் ஈடுசெய்யும். உடலில் அதிக அளவில் ஏற்படும் நீர் இழப்பு சோர்வை மட்டுமின்றி சன் ஸ்ட்ரோக்கையும் ஏற்படுத்தும். எனவே அதிக அளவு நீர் பருகுதல் உடலுக்கு குளிர்ச்சியூட்டும் காய், கனி வகைகளை அதிகஅளவில் எடுத்துக் கொள்வது இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். அந்த வகையில் இன்று எலுமிச்சையின் மகத்துவம் குறித்து அறிந்து கொள்வோம். எலுமிச்சை உடலுக்கு தேவையான விட்டமின் சத்து உள்பட ஏராளமான  சத்துக்களையும் உள்ளடக்கியது. சிட்ரஸ் ப்ரூட் வகையை சார்ந்தது. அதன் சாறு மட்டுமின்றி தோலும் சிறந்த மருந்தாகிறது. கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் உடல் வெப்ப பிரச்சனையில் இருந்து விடுபட எலுமிச்சை வெள்ளரி கலந்த சாறு பயன்தரும்.

இதற்கு தேவையான பொருட்கள்:

எலுமிச்சை சாறு இரண்டு தேக்கரண்டி, வெள்ளரி சாறு இரண்டு தேக்கரண்டி, சிறிது சீரகப்பொடி, கால் தேக்கரண்டி தேன்.  செய்முறை: எலுமிச்சை சாறு இரண்டு தேக்கரண்டி எடுத்து அதனுடன் இரண்டு தேக்கரண்டி வெள்ளரிச்சாறு சேர்க்கவும். அதில் சிறிது சீரகத்தூள் மற்றும் சமையல் உப்பு சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து பருகிவர வெப்பத்தாக்கத்தில் இருந்து மீண்டு உடல் குளுமையடையும். எலுமிச்சையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். அடுத்து கடுமையான வெயில் மற்றும் கோடையில் அதிக வெப்பத்தால் தலைசுற்றல், வாந்தி, குமட்டல், மற்றும் கழிச்சல் எனப்படும் பாதிப்புகள் பெரும்பாலானவர்களை தாக்கும்.

இதற்கு எளிய தீர்வு தருகிறது எலுமிச்சை. இதற்கு தேவைப்படும் தேனீர் செய்முறை குறித்து பார்ப்போம். தேவையான பொருட்கள்: எலுமிச்சை சாறு சிறிதளவு, சீரகம், தேன் மற்றும் சுத்தமான நீர். செய்முறை: ஒரு வாணலியில் அரை ஸ்பூன் சீரகத்தை போட்டு  வறுக்கவும். அதனுடன் அரை தேக்கரண்டி சுத்தமான தேன் சேர்த்து சூடாக்கவும். அதில் சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து வடிகட்டி குடித்து வர மேற்சொன்ன வெப்ப பாதிப்புகளான தலைசுற்றல், வாந்தி, குமட்டல், மற்றும் கழிச்சல் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

மேலும் எலுமிச்சை தோலை பொடியாக நறுக்கி வெயிலில் காயவைத்து பொடித்து வைத்து கொண்டால் தோல் நோய்கள் மற்றும் கட்டிகளுக்கு தீர்வு தரும் மருந்தாக இருக்கும். இந்த மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்: எலுமிச்சை தோல் பொடி சிறிதளவு, பால் அல்லது வெள்ளரி, தர்பூசணி, ஆரஞ்சு சாறு இவற்றில் ஏதாவது ஒன்று இரண்டு தேக்கரண்டி. செய்முறை: எலுமிச்சை பொடி சிறிது எடுத்து அதனுடன் பால் அல்லது பழச்சாறுகளில் ஏதாவது ஒன்று சிறிது கலந்து அதனை மேல்பூச்சாக தோலில் தடவி சிறிது நேரம் ஊறி கழுவிவர வெப்பத்தால் தோலில் ஏற்படும் கருமை மற்றும் கட்டி பாதிப்புகள் நீங்கும்.