தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 16.25 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. ஸ்டீவ் ஸ்மித் 2.20 கோடி ரூபாய்க்குதான் ஏலம் போனார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்லை ஆர்சிபி 14.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
மொயீன் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் 7 கோடி ரூபாய்க்கும், ஷாகிப் அல் ஹசனை கொல்கத்தா அணி 3.20 கோடி  ரூபாய்க்கும், தாவித் மலனை 1.5 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஷிவம் துபேவை 4.40 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஏலம் எடுத்தது.
முதற்கட்ட இடைவேளைக்கு முன் கடைசி வீரராக தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மோரிஸ் ஏலம் விடப்பட்டார்.

இவரை ஏலம் எடுக்க பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விருப்பம் காட்டின. இதனால் ஏலம் தொடங்கிய சிறிது நேரத்தில் தொகை 10 கோடியை தாண்டியது. 10 கோடி ரூபாயை தாண்டியதும் மும்பை இந்தியன்ஸ் பின் வாங்கியது.
ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மோதின. கிங்ஸ் பஞ்சாப் விடாமல் 16 கோடி ரூபாய் வரை கேட்டது. இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 16.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
33 வயதான கிறிஸ் மோரிஸ் இவ்வளவு ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்படுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.