அதிபர் தேர்தலையொட்டி புளோரிடா மாகாணத்தில் டிரம்ப் வாக்களித்தார்

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

அதிபர் தேர்தல் நவம்பர் 3-ம் தேதி என்றாலும், முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை அமெரிக்காவில் உண்டு. வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவே முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி உண்டு.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி புளோரிடா மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் வாக்களித்தார்.

தேர்தல் பிரசாரத்துக்காக புளோரிடா மாகாணத்துக்கு சென்ற டிரம்ப், அங்குள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். அப்போது அவர் தனது முகத்தில் மாஸ்க் அணிந்து இருந்தார்.

ஏற்கனவே அதிபர் தேர்தலையொட்டி கிட்டத்தட்ட 5.5 கோடி அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.