மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 8,000 பேர் 80 தனிமைப்படுத்தல் நிலையங்களில்

மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த சுமார் 8,000 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

 

 

இவர்கள் 80 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.இதேநேரம், நேற்றைய தினம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை கண்டறியும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொற்றுக்குள்ளானோருடன் தொடர்புகளை பேணியவர்களையும் தனிமைப்படுத்துவதன் மூலமே சமூகத்தில் மேலும் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் எனவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.இதேநேரம், மினுவாங்கொடை கொரோனா கொத்தணியை அண்மித்த பகுதிகளில் சுமார் 4,000 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.