இன்றைய அபார வெற்றியினூடாக தொடர் தோல்விகளிலிருந்து மீண்டது CSK

சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

பவர் பிளே முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மந்தீப் சிங் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல்  அரைசதம் கடந்தார். பூரன் 33 ரன்னில் வெளியேறினார். அடுத்த பந்தில் கேஎல் ராகுல் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை களமிறங்கியது.தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், டு பிளிஸ்சிஸ் இருவரும் இறங்கினர். இருவரும் ஆரம்பம் முதல் அடித்து ஆடினர். வாட்சன் கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விளாசினார். பவர்பிளே முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்தது.

இவர்கள் ஆட்டத்தை பஞ்சாப் அணி பந்து வீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. வாட்சன் 32 பந்திலும், டு பிளிஸ்சிஸ் 33 பந்திலும் அரைசதம் அடித்தனர். நான்கு போட்டிகளுக்குப்பின் வாட்சன் ஃபார்முக்கு வந்துள்ளார். ஓவருக்கு 10 ரன்கள் குறையாமல் பார்த்துக் கொண்டனர்.

இறுதியில், சென்னை அணி 17.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷேன் வாட்சன்  83 ரன்களும், டு பிளிஸ்சிஸ் 87 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.