தொடர் தோல்விகளுக்கான காரணத்தை வெளியிட்ட MSD

சென்னை அணி தொடர்ந்து 3 ஆவது தோல்வியை தழுவியது. ஆரம்பப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது. 

2 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸிடம் 16  ஓட்டங்களிலும்,  3 ஆவது  போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியிடம் 44  ஓட்டங்களிலும் தோல்வியடைந்திருந்தது.

ஐதராபாத் அணியிடம் அடைந்த தோல்வி குறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணித்தலைவர் தோனி கூறியுள்ளதாவது,

“என்னால் நிறைய பந்துகளை சரியாக துடுப்பெடுத்தாட முடியவில்லை. பந்தை அடித்து ஆட வேண்டும் என்ற முடிவினால் இப்படி ஆகியிருக்கலாம். 

ஆடுகளம் மந்தமாக இருக்கும்போது பந்தை நேரம் எடுத்துக் கொண்டு ஆடுவதுதான் சிறந்தது.

நாங்கள் நிறைய வி‌டயங்களை சரி செய்ய வேண்டியுள்ளது. பிடிகளை தவறு விடுவது, முறையற்ற பந்து (நோ போல்) வீசுவது ஆகியவை நல்லது அல்ல. இவையெல்லாம் நம்மால் கட்டுப்படுத்தக் கூடியவைதான்.

நாங்கள் அதே தவறை மீண்டும் செய்துள்ளோம். 16 ஆவது ஓவருக்கு பிறகு 2 ஓவர் மோசமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக போட்டியில் இன்னும் மேம்பட வேண்டும்.

மேலும், இங்குள்ள வெப்பநிலைக்கு எனக்கு தொண்டை வறண்டு விடுகிறது. இதனால் இருமல் வருகிறது. 

இவை அறிகுறியாக இருக்கும்போது, நாம் நேரம் எடுத்துகொண்டு ஆடுவது நல்லதுதான். மற்றபடி நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.

ஐதராபாத் அணி 2 ஆவது வெற்றியை பெற்றது. இந்த வெற்றி குறித்து அந்த அணித்தலைவர் டேவிட் வோர்னர் கூறும்போது, “இந்த ஆடுகளத்தில் 150 ஓட்டங்களுக்கு  மேல் எடுப்பது சிறந்த ஓட்ட எண்ணிக்கையாகும். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டனர். ஆனால் இது ஒரு மோசமான ஆடுகளம்” என்றார்.